ஒரேவொரு போனால் 2.5 கோடி போன்களை மாற்றப்போகும் ஜியோ! ரூ.999 விலைக்கு பின்னால் இருக்கும் பிளான்!
இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவரும் 2.5 கோடி 2ஜி மொபைல்களை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து விட்டு, அந்த இடத்தில் ஜியோ பாரத் போனை (Jio Bharat Phone) கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்டத்தை ஜியோ நிறுவனம், தனது வழக்கமான பாணியில் தொடங்கிவிட்டது. இதுகுறித்த விவரம் இதோ.
டெலிகாமில் (Telecom) கொடிக்கட்டி பறந்துவரும், ஜியோ (Jio) நிறுவனம், நாளுக்கு நாள் மற்ற டெலிகாம் நிறுவன வாடிக்கையாளர்களை எளிதாக தன்பக்கம் குவித்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் போட்டிபோட முடியாமல் மற்ற நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், அந்த நிறுவனங்களை முற்றிலும் காலி செய்யும் வகையிலேயே ஜியோவின் அடுத்தடுத்த முடிவுகள் இருக்கின்றன.

ஏற்கனவே, 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்குவதில் ஜியோ நிறுவனமே முன்னணியில் இருக்கிறது. இதனிடையே ஜியோ போனை அறிமுகப்படுத்தி 2ஜி சேவைகளை பயன்படுத்தி வந்த மக்களை, எளிதாக 4ஜி சேவைக்கு மாற்றியது. இப்போது, 4 கோடிக்கும் குறைவான மக்களே 2ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். இதில், 2.5 கோடி மக்களிடம் மட்டுமே 2ஜி போன்கள் இருக்கின்றன.
இவர்களை ஒட்டுமொத்தமாக ஜியோ நெட்வொர்க்குக்கு மாற்றுவது மட்டுமல்லாமல், அவர்களது கையில் ஜியோ நிறுவனத்தின் போனை கொண்டுசேர்க்கும் வகையில், ஜூலை 3ஆம் தேதி ஜியோ நிறுவனம், ஜியோ பாரத் போன் மற்றும் ஜியோ பாரத் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இதில் ஜியோ பாரத் போனின் விலை ரூ.999 ஆகவும், ஜியோ பாரத் பிளானின் மாதாந்திர கட்டணம் ரூ.123 ஆகவும் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜியோ பாரத் ப்ரீபெய்ட் திட்டங்கள், மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட பல மடங்கு மலிவு விலை என்பது மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ், குறைந்தபட்ச டேட்டா, ஜியோ ஆப்ஸ் சலுகைகளையும் கொண்டுள்ளது. ஒரு சாமானியன், எப்படி யோசித்து பார்த்தாலும் அவனுக்கு ஜியோவுக்கு மாறுவதே லாபத்தை தரக்கூடியதாக தோன்றும். இதனால், வேறு வழியே இல்லாமல் ஜியோ போன்களை வாங்க மக்கள் குவியப்போவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இதனால், அடுத்த சில மாதங்களில் கோடிக்கணக்கான மக்கள் புதிய ஜியோ வாடிக்கையாளர்களாக உருவாகப் போகின்றனர். அதோடு 2ஜி சகாப்தம் முடிவுக்கும் வரப்போகிறது. இந்த நேரத்தில் ஜியோ பாரத் போன் மற்றும் ஜியோ பாரத் பிளான்கள் குறித்து தெரிந்துகொள்வோம். இந்த ஜியோ பாரத் போன் ஒரு ஃபீச்சர் போனாகும். அதில், 4ஜி இன்டர்நெட் (4G internet) மற்றும் யுபிஐ பேமெண்ட் (UPI Payment) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதோடு ஜியோ பாரத் பிளான் மூலம் மாதம் ரூ.123 மட்டுமே செலுத்தினால், அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சாவன் (JioSaavn) போன்ற ஜியோ ஆப்களை (Jio Apps) பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவே ரூ.1,234 செலுத்தினால், 365 நாட்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை பெற்றுகொள்ளலாம்.
இந்த ஜியோ பாரத் போனின் விற்பனை ஜூலை 7ஆம் தேதி தொடங்குகிறது. ஜியோ ஆப் (Jio App) வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள முடியும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








