அனைவருக்கும் இபாஸ் அறிவிப்பு: குவியும் பயணிகள்., ஒரே நாளில் இவ்வளவு பேரா!
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இபாஸ் விண்ணபிக்கும் அனைவருக்கும் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும் என அறிவிப்பையடுத்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து மே 24 ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அதேபோல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மே மாதம் 25 ஆம் தேதிமுதல் பயணத்தின் காரணத்திற்கு ஏற்ப இபாஸ் அறிவிக்கப்பட்டு உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது.

1,45,000-த்துக்கும் மேற்பட்ட பயணிகள்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பிற இடங்களுக்கும் தங்களது சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். அதேபோல் கடந்த ஜூலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் எண்ணிக்கை சுமார் 1,45,000-த்துக்கும் மேற்பட்டோர் என தெரிவிக்கப்படுகிறது.

24 மணி நேரத்திற்குள் ஒப்புதல்
இந்த நிலையில் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணங்களுக்காக இ-பாஸ்கள் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் ஒப்புதல் கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

முன்பு குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே இபாஸ்
இ-பாஸ் விண்ணப்பிக்கும் பயனர்களின் காரணங்களைப் பார்த்துவிட்டு ஒப்புதல் வழங்கப்படுகிறது. திருமணங்கள், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு மட்டுமே முன்பு இ-பாஸ் வழங்கப்பட்டது. இப்போது, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் இப்போது தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாகும்.

பொது நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு
அதோடு இ-பாஸ் மீதான தடையை எளிதாக்கும் இந்த முடிவு பொது நலனுக்காக எடுக்கப்பட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். இந்த இ-பாஸை முக்கியமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். கோவிட் -19 தொற்றுநோய் பரவாமல் தடுக்க, அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம்
இ-பாஸுக்கு விண்ணப்பிக்க TN அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tnepass.tnega.org/#/user/pass வலைப்பக்கத்தை பயன்படுத்தும்படி அதில் காட்டும் வழிமுறைகளை பின்பற்றி தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி இபாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

7500-க்கும் மேற்பட்ட பயணிகள்
இந்த நிலையில் அனைவருக்கும் இபாஸ் என்ற அறிவிப்புக்கு பிறகு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சுமார் 7500-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரே நாளில் பயணித்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications