RBI வச்ச லிமிட்! இனி ரூ.15000 க்குள், ரூ.15000 க்கு மேல்.. UPI, ATM, Credit கார்டு புது ரூல்ஸ்.. எந்த பேமண்ட்?
ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள், ஏடிஎம் என்கிற டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு வழியிலான ஒரு குறிப்பிட்ட வகையான பேமண்ட்டிற்கு ரூ.15000 க்குள் மற்றும் ரூ.15,000 மேல் என்கிற வரம்பின் கீழ் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அந்த பேமண்ட் வகை ஆட்டோ-டெபிட் அல்லது இ-மேண்டேட் பேமண்ட் ஆகும். இந்த வகை பேமெண்ட்டிற்காக ஆர்பிஐ அறிவித்துள்ள புதிய விதிகள் ஆனது - யுபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் வாலெட்டுகள் வழியாக, ஆட்டோ-டெபிட் என்கிற தொடர் பேமண்ட்கள் செயல்படும் விதம் மாறப்போகிறது.

நெட்பிளிக்ஸ் சந்தாக்கள் மற்றும் எஸ்ஐபி-க்கள் முதல் மின்சார கட்டணங்கள் மற்றும் கிரெடிட் கார்டு பேமண்ட்கள் வரை, ஆட்டோ டெபிட் (Auto debit) ஆனது அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது; இது எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் முதலில் ஆட்டோ-டெபிட் அல்லது இ-மேண்டேட் என்றால் என்ன? என்று பார்த்துவிடலாம். பின்னர் ஆர்பிஐ-யின் புதிய விதிகளை பற்றி பார்ப்போம்.
ஆட்டோ-டெபிட் அல்லது இ-மேண்டேட் என்றால் என்ன? ஆட்டோ-டெபிட் / இ-மேண்டேட் என்பது ஒரு வாடிக்கையாளர் தனது வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு வழங்கும் அறிவுறுத்தலின் டிஜிட்டல் வடிவம் (digital version of an instruction) ஆகும். இந்த அறிவுறுத்தல், கடன் இஎம்ஐ-கள், பயன்பாட்டு கட்டணங்கள் (மின்சார கட்டணம் போன்றவைகள்) மற்றும் சந்தாக்கள் போன்ற தொடர் பேமண்ட்களை (அதாவது ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் பேமண்ட்களை) உங்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு அல்லது யுபிஐ-இலிருந்து நேரடியாக, தானாகவே பிடித்தம் செய்ய நிறுவனங்களை அனுமதிக்கிறது.
இது ஒவ்வொரு முறையும் கைமுறையாக பணம் செலுத்தும் தேவையை நீக்குகிறது, தாமதமாக கட்டணம் செலுத்துவதையும் மற்றும் அதனால் ஏற்படும் கூடுதல் கட்டணங்களையும் குறைக்கிறது. ஒரு இ-மேண்டேட்டை அமைக்க, வாடிக்கையாளர் ஒரு ஒப்புதல் படிவத்தை நிரப்ப வேண்டும், மேலும் நெட் பேங்கிங் சான்றுகள், கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள் போன்றவற்றை பயன்படுத்தித் தனது அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட சரிபார்ப்பு முடிந்தவுடன், வங்கி ஆனது தொடர் பேமண்ட் அறிவுறுத்தலை அமைத்து, அது உடனடியாக செயல்படுத்தப்படுகிறது.
சரி இதில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிகள் என்ன? இனிமேல் ரூ.15,000 வரையிலான தொடர்ச்சியான பரிவர்த்தனைகளை (Recurring transactions), ஓடிபி (OTP) போன்ற கூடுதல் அங்கீகாரம் தேவையின்றி செயல்படுத்தலாம். இதற்காக பயனர்கள் ஏஎப்ஏ (AFA) அடிஷனல் பேக்டர் ஆத்தென்டிகேஷனை (Additional factor authentication) பயன்படுத்தி இ-மேன்டேட்டிற்கு பதிவு செய்ய வேண்டும்.
ஏஎப்ஏ அங்கீகரிக்கப்பட்டவுடன், ரூ.15,000 வரையிலான அடுத்தடுத்த தொடர்ச்சியான பேமண்ட்கள் ஒவ்வொரு முறையும் ஒடிபி தேவையின்றி தானாகவே செயல்படுத்தப்படும். ஆனால் ரூ.15,000 என்கிற வரம்பிற்கு மேற்பட்ட பெரும்பாலான கட்டண பரிவர்த்தனைகளுக்கு ஒடிபி அங்கீகாரம் தேவைப்படும். அதாவது ஒடிபி செயல்முறை இல்லாமல் ஆட்டோ-டெபிட் ஆகாது.
இதோடு காப்பீட்டு பிரீமியங்கள் (insurance premiums), மியூச்சுவல் ஃபண்டுகள் (mutual funds) மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்கள் (credit card bills) போன்ற குறிப்பிட்ட தொடர்ச்சியான பேமண்ட்களுக்கு, ஏஎப்ஏ செயல்முறைக்கு கீழே வராத வரம்பு (AFA-free limit) ரூ.1 லட்சம் வரை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்திற்கு முன்பாகவே: மேலும் திட்டமிடப்பட்ட பிடித்தத்திற்கு (ஆட்டோ-டெபிட்டிற்கு) குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பாக வங்கிகள் ஒரு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் அதுகுறித்த விவரங்களை வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும்.. வாடிக்கையாளர்களுக்கு இடைநிறுத்தம் செய்ய, ரத்து செய்ய அல்லது விலகிக்கொள்ளும் விருப்பத்தை அளிக்க வேண்டுமென்றும் உத்தவிரட்டப்பட்டுள்ளது
இதன்கீழ் பயனர்கள் எவ்வாறு பயனடைவார்கள்? இந்த வசதி நெட்ஃபிளிக்ஸ் சந்தா, மாதாந்திர சேமிப்பு திட்டம் (SIP), மின்சார கட்டணம் அல்லது பிற தொடர்ச்சியான பேமண்ட்கள் என எதுவாக இருந்தாலும், ஆட்டோ டெபிட் ஆனது இனி இன்னும் சீராக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தோல்வியுறும் பரிவர்த்தனைகள் குறைவதோடு, சிறிய கொடுப்பனவுகளுக்கு மீண்டும் மீண்டும் வரும் ஒடிபி தொந்தரவும் குறையும்.
இந்த புதிய விதிகள் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டையும் அளிக்கின்றன. ஏனெனில், வங்கிகள் இனி எச்சரிக்கைகளை அனுப்புவதோடு, பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் அனைத்தையும் மாற்றியமைக்கவும் அனுமதிக்கும். இருந்தாலும் - பயனர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள சந்தாக்கள் மற்றும் ஆட்டோ-பேமண்ட்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதும் முக்கியம் ஏனெனில், நீங்கள் பயன்படுத்தப்படாத ஆப்கள் அல்லது பழைய சந்தாக்கள், உங்களுக்கு தெரியாமலேயே இன்னமும் உங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications