31ஆம் தேதி கடைசி.. வருமான வரி, ஆதார் கார்டு, மொபைல் நம்பர்.. இதை மட்டும் செஞ்சி முடிங்க.. இல்லைனா சிரமம்!
வருமான வரி தாக்கல் 2026 (ITR Filing 2026) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரி செலுத்துவோர் பலரும் தங்களது வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் கடைசி தேதிக்குள் ஐடிஆர் படிவத்தை சமர்ப்பிப்பதோடு தங்கள் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், நீங்கள் தாக்கல் செய்த ஐடிஆர் படிவத்தை இ-வெரிஃபை (e-verify) செய்த பிறகுதான் அந்த வரித் தாக்கல் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். கணக்கு தணிக்கை (Audit) செய்யத் தேவையில்லாத சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு, 2025-26 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2026-27) ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31, 2026 ஆகும்.

நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இ-வெரிஃபிகேஷன் செய்யத் தவறினால், நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு செல்லாததாகிவிடும். இதனால் உங்களுக்கு வரவேண்டிய வரி ரீஃபண்ட் (Refund) தொகைகள் தாமதமாகலாம். அபராதம் விதிக்கப்படலாம். தற்போது இந்த இ-வெரிஃபிகேஷன் செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, வெறும் சில நிமிடங்களில் முடிக்கும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது.
1. ஆதார் ஓடிபி (Aadhaar OTP): இது இ-வெரிஃபை செய்வதற்கான மிக எளிய மற்றும் பொதுவான வழியாகும். உங்கள் பான் கார்டு (PAN) மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த முறையில், ஆதாரில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அதை வருமான வரி இணையதளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் சரிபார்ப்பு செயல்முறை உடனடியாக முடிவடையும்.
2. மின்னணு சரிபார்ப்பு குறியீடு (EVC): வரி செலுத்துவோர் தங்களின் வங்கி கணக்கு (Bank Account), டிமேட் கணக்கு (Demat Account) அல்லது ஏடிஎம் (ATM) மூலமாக மின்னணு சரிபார்ப்பு குறியீட்டை (Electronic Verification Code - EVC) உருவாக்கலாம். முன்கூட்டியே சரிபார்க்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களைக் கொண்டு இ-ஃபைலிங் போர்ட்டலில் இந்த குறியீட்டைப் பெற்று, அதன் மூலம் ஐடிஆர்-ஐ இ-வெரிஃபை செய்ய முடியும்.
3. நெட் பேங்கிங் (Net Banking): பெரும்பாலான வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங் மூலம் நேரடியாக இ-வெரிஃபை செய்யும் வசதியை வழங்குகின்றன. வரி செலுத்துவோர் தங்களின் நெட் பேங்கிங் கணக்கில் லாகின் செய்து, டாக்ஸ் ஃபில்லிங் (Tax Filing) அல்லது இ-வெரிஃபிகேஷன் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அது உங்களை நேரடியாக வருமான வரித் துறையின் போர்ட்டலுக்கு அழைத்து சென்று சரிபார்ப்பை நிறைவு செய்ய உதவும்.
4. டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ் (DSC): நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள் (LLPs) மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள தனிநபர்கள் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் கையொப்ப சான்றிதழை (Digital Signature Certificate) இணைப்பதன் மூலம் அவர்களின் வரித் தாக்கல் பாதுகாப்பான முறையில் சரிபார்க்கப்படுகிறது.
5. பிசிகல் ஐடிஆர்-வி (Physical ITR-V): ஆன்லைன் அல்லது டிஜிட்டல் முறையில் இ-வெரிஃபை செய்ய முடியாதவர்கள் இந்த மாற்று வழியைப் பயன்படுத்தலாம். நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தவுடன் கிடைக்கும் ITR-V ஒப்புதல் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் நீல நிற மையினால் (Blue Ink) கையொப்பமிட வேண்டும். பின்னர், அதனை ஐடிஆர் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் மத்திய செயலாக்க மையத்திற்கு (CPC) ஸ்பீட் போஸ்ட் (Speed Post) மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
இ-வெரிஃபிகேஷன் முடிவடைந்ததை எப்படி அறிவது? உங்கள் ஐடிஆர் படிவத்தை சரிபார்க்க, வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in பக்கத்திற்கு சென்று லாகின் செய்ய வேண்டும். பின்னர் இ-பைல் (e-File) விருப்பத்துக்கு சென்று, வருமான வரித் தாக்கல் (Income Tax Returns) என்பதைத் தேர்ந்தெடுத்து, இ-வெரிஃபை தாக்கல் (e-Verify Return) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் சரிபார்ப்பை முடித்தவுடன், திரையில் ஒரு பரிவர்த்தனை ஐடி (Transaction ID) மற்றும் வெற்றிகரமாக முடிந்தது என்ற செய்தி தோன்றும். மேலும், இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு (Email ID) உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படும். எனவே, வரி செலுத்துவோர் தங்களின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வருமான வரி போர்ட்டலில் எப்போதும் புதுப்பித்து வைத்திருப்பது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications