Indian Railways | 30 நிமிட ரூல்ஸ் வந்தாச்சு.. IRCTC புதிய அப்டேட்.. ரயில் பயணிகள் நிம்மதி.. ஏன்?
இந்திய ரயில்வே (Indian Railways) அமைப்பு தொடர்ந்து புதிய வசதி கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக, முன்பதிவு செய்த டிக்கெட்டுகளில் ரயில் ஏறும் நிலையத்தை (Boarding Point) மாற்றுவதற்கான விதிமுறைகளில் மாற்றங்களைச் செய்துள்ளது இந்திய ரயில்வே அமைப்பு.
குறிப்பாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய நடைமுறையானது, கடைசி நேரப் பயணத் திட்ட மாற்றங்களால் அவதிப்படும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

அதாவது பழைய நடைமுறையின்படி, பயணிகள் தங்களது ரயில் ஏறும் நிலையத்தை மாற்ற வேண்டும் என்றால் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது முதல் சார்ட் (First Chart) தயாராவதற்கு முன்பாகவோ மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் இப்போது கொண்டுவரப்பட்ட புதிய விதியின் கீழ், இரண்டாவது அல்லது இறுதி சார்ட் (Final Chart) தயாராகும் வரை, அதாவது ரயில், நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை கூட பயணிகள் தங்களது போர்டிங் பாயிண்ட்டை மிக எளிதாக மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில முக்கிய நிபந்தனைகளை ரயில்வே வாரியம் விதித்துள்ளது. முதன்மையான நிபந்தனை என்னவென்றால், பயணிகளின் டிக்கெட் உறுதியானது (Confirmed) அல்லது ஆர்.ஏ.சி (RAC) நிலையில் இருக்க வேண்டும். அதேபோல் காத்திருப்போர் பட்டியலில் (Waitlisted) உள்ள டிக்கெட்டுகளுக்கு இந்த வசதி பொருந்தாது. குறிப்பாக ஒரு டிக்கெட்டிற்கு ஒரு முறை மட்டுமே போர்டிங் பாயிண்ட்டை மாற்ற அனுமதி வழங்கப்படும்.
குறிப்பாக ரயில் அமைப்பு தெரிவித்துள்ள தகவலின்படி, ஒருமுறை ரயில் ஏறும் நிலையத்தை மாற்றிவிட்டால், பயணி பழைய நிலையத்திலிருந்து ரயிலில் ஏற முடியாது, புதிய போர்டிங் பாயிண்ட்டில் இருந்துதான் பயணத்தைத் தொடங்க வேண்டும். ஒருவேளை பழைய நிலையத்திலேயே ஏற முயன்று, அந்த இருக்கை வேறு யாருக்காவது ஒதுக்கப்பட்டிருந்தால், அதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என்பதோடு பயணி அபராதம் செலுத்த வேண்டிய சூழலும் உருவாகலாம்.
போர்டிங் ஸ்டேஷன் மாற்றுவது எப்படி?
பயணிகள் இந்த சேவையை இந்திய ரயில்வேயின் டிக்கெட் கவுண்டர்கள், ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் அல்லது 'ரயில்ஒன்' (RailOne) மொபைல் செயலி வாயிலாக பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக ஆன்லைனில் டிக்கெட் எடுத்தவர்கள் தங்களது Booking History பகுதிக்குச் சென்று Change Boarding Point என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து சில நொடிகளில் இந்த மாற்றத்தைச் செய்துகொள்ள முடியும்.

குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அல்லது அவசர வேலை காரணமாகத் திட்டமிட்ட நிலையத்துக்குச் செல்ல முடியாதவர்களுக்கு, அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ஏறுவதற்கு இந்த 30 நிமிட கால அவகாசம் ஒரு வரப்பிரசாதமாகும்.
அதுவும் கடைசி நேரத்தில் ஸ்டேஷன் போவதில் சிக்கல் இருந்தால் இனி பதற வேண்டியதில்லை மொபைல் ஆப் மூலம் போர்டிங் ஸ்டேஷனை மாத்திவிட்டு அடுத்த ஸ்டேஷனில் நிதானமாக ரயிலைப் பிடிக்கலாம். ஆனால் நீங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்வதாக இருந்தால் 8 மணி நேரத்திற்கு முன்பே முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு ரீஃபண்ட் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








