3 தவறுகள்.. ITR Filing-ல் இதில் 1 செய்தாலும் ஆய்வு நோட்டீஸ் வரும்! பழையபடி ஈஸியா பண்ணிடலாம் நினைச்சவங்க பாவம்!
ஐடிஆர் ஃபைலிங் (ITR Filing) என்கிற வருமான வரி தாக்கல் (Income tax return filing) செய்வது என்பது இனி வருமானத்தை பதிவு செய்வது மற்றும் வரி விலக்குகளை கோருவது தொடர்பான ஒரு வேலையாக மட்டும் இருக்கப்போவதில்லை. மாறாக இது தரவுகளை சரிபார்க்கும் ஒரு செயல்முறையாக உருமாறி வருகிறது.
இந்த 2026 ஆம் ஆண்டில், வருமான வரித் துறை ஆனது செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு மற்றும் பல மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் பயன்பாட்டை தீவிரப்படுத்துவதால், அதிகமான வரி செலுத்துவோர் ஆய்வு அறிவிப்புகளை (Scrutiny notices) பெறுவார்கள் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதாவது இன்கம் டேக்ஸ் டிப்பார்ட்மென்ட்டின் நோக்கம் எளிமையானது: வரி செலுத்துவோர் தெரிவிக்கும் தகவல்களுக்கும், அரசாங்கத்திற்கு ஏற்கனவே தெரிந்த தகவல்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை கண்டறிவது. பிசிஏஎஸ்-ன் (BCAS) பொருளாளர் ஆன கின்ஜல் பூட்டாவின் கூற்றுப்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று வரி ஆய்வு என்பது தோராயமான தேர்வுகளை மிக குறைவாகவே சார்ந்துள்ளது. இந்த செயல்முறை கணிசமாக தரவுகளை மையமாக கொண்டதாக மாறியுள்ளது என்கிறார் பூட்டா.
ஏஐஎஸ் (AIS) என்கிற வருடாந்திர தகவல் அறிக்கை (Annual Information Statement), பார்ம் 26ஏஎஸ் (Form 26AS), டிடிஎஸ் பதிவுகள் (TDS records), மூலதன ஆதாய அறிக்கைகள் (Capital gains statements), வங்கி வட்டி அறிக்கைகள் (Bank interest reports), ஜிஎஸ்டி தாக்கல்கள் (GST filings) மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மூலம் கிடைக்கும் தகவல்களுடன் இப்போது வருமான வரிக் கணக்குகள் சரிபார்க்கப்படுகின்றன.
இதன் பொருள், சிறிய தவறுகள் கூட கேள்விகளை எழுப்பக்கூடும். ஒரு வரி செலுத்துவோர் நிலையான வைப்புத்தொகையிலிருந்து ஈட்டிய வட்டியை பதிவு செய்ய மறந்துவிடலாம். மற்றொருவர் பங்குச் சந்தை பரிவர்த்தனையை கவனிக்க தவறிவிடலாம். ஒரு வணிக உரிமையாளர் ஜிஎஸ்டி பதிவுகளுடன் பொருந்தாத வருவாய் புள்ளிவிவரங்களை பதிவு செய்யலாம்.
ஒரு சிறிய கவனக்குறைவாக தோன்றுவது, துறையின் கணினி அமைப்புகளில் விரைவாக ஒரு எச்சரிக்கை அறிகுறியாக வெளிப்படலாம். இப்படியாக வருமான வரி கணக்கு தாக்கலின் போது வரி அறிவிப்புகளை (Notices) வரவழைக்கும் பொதுவான 3 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன. அவைகளை செய்யாமல் இருப்பது நல்லது:
1. வருமானத்தை முழுமையாக குறிப்பிடாதது மிகவும் அடிக்கடி நிகழும் தவறுகளில் ஒன்றாகும்: ஆண்டுக்கு ரூ.18 லட்சம் சம்பளம் பெறும் ஒருவர், தனது சம்பள வருமானத்தை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) மற்றும் சேமிப்பு கணக்குகள் மூலம் ஈட்டிய ரூ.1.2 லட்சம் வருமானத்தை குறிப்பிடாமல் விடுவது தவறு என்று பூட்டா சுட்டிக்காட்டுகிறார்.
வங்கிகள் இத்தகவல்களை வரி அதிகாரிகளிடம் தெரிவிப்பதால், இந்த முரண்பாட்டை எளிதாக கண்டறிய முடியும். இதன் விளைவுகள் நிலுவையில் உள்ள வரியை செலுத்துவதை தாண்டி செல்லக்கூடும். வருமானத்தை குறைவாகக் காட்டுவது வட்டி மற்றும் அபராதங்களை ஈர்க்கக்கூடும்; சில சமயங்களில், குறைவாக காட்டப்பட்ட வருமானத்தின் மீதான வரியில் 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
2. மூலதன ஆதாயங்கள் (Capital gains) மற்றொரு முக்கிய கவலைக்குரிய பகுதியாகும்: பட்டியலிடப்பட்ட பங்குகள் மூலம் நீண்ட கால மூலதன ஆதாயமாக ரூ.8 லட்சம் ஈட்டும் ஒரு முதலீட்டாளர், அந்த பரிவர்த்தனையை தெரிவிக்க தவறினால், தரவு பகுப்பாய்வு (data analytics) மூலம் அந்த தவறு கண்டறியப்படலாம். இதன் விளைவாக கூடுதல் வரி கோரல்கள், வட்டிச் சுமைகள் மற்றும் கூடுதல் ஆய்வுகள் ஏற்படலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRIs) பெரும்பாலும் இதே போன்ற தவறை செய்வதாக பூட்டா குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள சொத்து அல்லது முதலீடுகளை விற்ற பிறகு, இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என்று பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இத்தகைய பரிவர்த்தனைகள் பெரும்பாலும் புறக்கணிக்க முடியாத வரி தாக்கல் கடமைகளை உருவாக்குகின்றன.
3. தவறான வரி விலக்கு கோரல்களும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கின்றன: ஆதார ஆவணங்களுடன் பொருந்தாத கோரல்கள், வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளின் போது கேள்விக்குள்ளாக்கப்படலாம். சமீப காலங்களில், தகுதியற்ற அல்லது விதிமுறைகளுக்கு இணங்காத அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் தொடர்பான வரி விலக்கு கோரல்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அடுத்ததாக, வர்த்தக பரிவர்த்தனை அளவு (turnover) தொடர்பான முரண்பாடுகள் உள்ளன. ஒரு தொழில்முறை நிபுணர் தனது வருமான வரி கணக்கில் மொத்த வருவாயாக ரூ.25 லட்சத்தைக் காட்டிவிட்டு, அதே சமயம் ஜிஎஸ்டி கணக்குத் தாக்கலில் ரூ.35 லட்சம் வருவாய் இருப்பதாக காட்டினால், அந்த முரண்பாடு அதிகாரிகளின் ஆய்வை ஈர்க்கக்கூடும். பல்வேறு துறைகளின் தரவுத்தளங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு வருவதால், இத்தகைய முரண்பாடுகளை முன்னெப்போதையும் விட எளிதாக கண்டறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications