பெற்றோர்களே உஷார்! குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்!
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். இன்னும் பலருக்கும் அதிலிருந்து எப்படி வர வேண்டும் என்பதற்கான வழிகளும் தெரியும்.

ஆனால் தற்பொழுது இளைஞர்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும் டிஜிட்டல் போதை பழக்கத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த டிஜிட்டல் போதை பழக்கத்திலிருந்து எப்படி உங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று தெரியுமா?

மிகவும் ஆபத்தான டிஜிட்டல் போதை பழக்கம்
குடிபோதை பழக்கத்திற்கு அடிமையாகுவதைக் காட்டிலும், டிஜிட்டல் போதை பழக்கத்திற்கு அடிமையாகுவதை மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இடைவிடாது, தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் அல்லது கேட்ஜெட்களை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் இந்த டிஜிட்டல் போதை பழக்கம் உண்டாவதாக அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றது.

மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆபத்து
டிஜிட்டல் போதை பழக்கத்திற்குப் பாதிக்கப்பட்டவர்களால், டிஜிட்டல் கேட்ஜெட்கள் இல்லாமல் சில மணி நேரங்கள் கூட இருக்க முடியாதாம். பாதிக்கப்பட்ட இவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகம் பாதிப்படைந்து ஆபத்தான நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்கொலைக்குத் தூண்டப்படுவது
இளைஞர் முதல் குழந்தைகள் வரை மனமுடைந்து தற்கொலை செய்வது, தற்கொலைக்குத் தூண்டப்படுவது, கோபமடைந்து கொலை செய்வது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் இந்த பழக்கத்தினால் தான் உண்டாகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

டிஜிட்டல் போதையினால் உண்டான மரணங்கள்
உதாரணத்திற்குச் சென்ற வாரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாய்யான 24 வயது பெண், டிக் டாக் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கணவன் கண்டித்ததற்குத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நாம் அறிவோம், அதேபோல் 16 வயது இளைஞர் ஒருவர் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேமை விளையாடி மாரடைப்பு வந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பற்றியும் நாம் அறிவோம்.

அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான்
இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம், டிஜிட்டல் கேட்ஜெட்களுக்கு அடிமை ஆகுவது தான். பொழுதுபோக்கிற்காக சில நிமிடங்கள் பயன்படுத்தி விளையாட வேண்டிய பழக்கத்தை, பல மணி நேரம் தொடர்ச்சியாக விளையாடி அதற்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

பெரிதும் பாதிக்கப்படும் குழந்தைகள்
அதிக அளவில் மனநல ரீதியாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இந்த பழக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த டிஜிட்டல் போதை பழக்கத்திலிருந்து நம் குழந்தைகளை வெளியில் கொண்டு வருவதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது என்ன என்றால்? முதலில் அதனை கண்டறிவது தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

டிஜிட்டல் போதைக்கு அடிமையாகி உள்ளவரை எப்படிக் கண்டறிவது?
- முதலில் இவர்கள் டிஜிட்டல் கேட்ஜெட்கள் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார்கள், குளிக்கச் சென்றால் கூட இவர்களுடன் இவர்களின் கேட்ஜெட்கள் பின்தொடரும்.
- ஒரு நாளில் குறைந்தது 4 மணி நேரம் கூட இவர்களால் ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட்கள் இல்லாமல் இருக்க முடியாது.
- அவர்களின் வழக்கமான வேலைகளைக் கூடச் செய்ய மறுப்பார்கள்.
- சரியான தூக்கமில்லாமல் ராக்கோழியாக இருப்பார்கள்.
- கேட்ஜெட்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று அன்பாகச் சொன்னால் கூட எரிச்சல் மற்றும் கோபம் கொள்வார்கள்.
- பெற்றோருக்குத் தெரியாமல் அல்லது பொய் சொல்லி கேட்ஜெட்களை பயன்படுத்துவார்கள்.
- அவர்களின் அன்றாட வேலைகளைப் புறக்கணிப்பார்கள்.
- பெற்றோர், நண்பர்கள் என யாரிடமும் நெருங்கிப் பழகமாட்டார்கள்.
- மனச்சோர்வு, பதட்டம், வெறித்தனமான அறிகுறிகள், தூக்கமின்மை, எரிச்சல் மற்றும் கவனம் குறைவு போன்ற அறிகுறிகள் இவர்களிடத்தில் காணப்படும்.

டிஜிட்டல் போதை பழக்கத்திலிருந்து இவர்களை எப்படி மீட்பது?
- முதலில் பெற்றோர்கள் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் பெற்றோர்களே நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட்களை பயன்படுத்துகின்றனர். குழந்தைகளின் நலனிற்காக அப்படி இல்லாமல் இருக்க வேண்டும்.
- குழந்தைகளுடன் அன்பாகப் பேசி, அவர்களுக்கு எடுத்துச் சொல்லி வேறு பொழுதுபோக்கிற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
- வெளியில் சென்று விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
- நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வர வேண்டும்.
- குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தொடர்ச்சியாக 4 மணி நேரம் கேட்ஜெட்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். இம்முறையை டிஜிட்டல் டீடாக்ஸ்(digital detox) என்பார்கள்.
- புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட வேண்டும்.

தாமதிக்க வேண்டாம்!
இந்த முறைகளைப் பின்பற்றி டிஜிட்டல் போதை பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மீட்டுக் கொண்டுவர இயலும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் நீங்கள் அன்பாகக் கூறியும், கண்டித்தும் உங்கள் குழந்தைகள் உங்களிடம் பொய் சொல்லி அல்லது உங்களுக்குத் தெரியாமல் தொடர்ச்சியாக டிஜிட்டல் கேட்ஜெட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தாமதிக்காமல் நல்ல மருத்துவரை அணுகி ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுங்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications