யார்யா நீங்கெல்லாம்.. 120 இன்ச்.. ஹெட்லைட்டால் படம் காட்டும் கார்கள்.. இந்தியாவில் எப்போது அறிமுகம்?
தொழில்நுட்ப வளர்ச்சி இன்று மனித கற்பனையின் எல்லைகளையே தாண்டி புதிய அதிசயங்களை உருவாக்கி வருகிறது. நேற்று வரை வெறும் வெளிச்சம் தரும் கருவியாக இருந்த கார் ஹெட்லைட்டுகள் இன்று ஒரு மினி தியேட்டர் ப்ரொஜெக்டராக மாறும் அளவுக்குத் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. குறிப்பாக, உயர்தர சொகுசு கார்களில் அறிமுகமாகி வரும் இந்த புதுமையான அம்சம், வாகன உலகில் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவே (Huawei) அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பிக்ஸல் (XPixel)தொழில்நுட்பம், எதிர்காலக் கார்கள் வெறும் பயணத்திற்கு மட்டுமின்றி அவை நகரும் பொழுதுபோக்கு மையங்கள் என்பதையும் நிரூபித்துள்ளது.

ஹெட்லைட் ப்ரொஜெக்டர்
பொதுவாக கார்களில் பொருத்தப்படும் ஹெட்லைட்டுகள் இரவு நேரங்களில் பாதையை ஒளிரச் செய்வதற்கும், ஓட்டுநரின் பார்வையை மேம்படுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், புதிய தலைமுறை சீன சொகுசு கார்களில் அதிநவீன மில்லியன் பிக்சல் (Million Pixels) எல்.இ.டி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆகவே காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அதன் ஓபன்-ஏர் சினிமா (Open-air cinema) வசதியை ஆன் செய்யும்போது, இந்த ஹெட்லைட்டுகள் ஒரு பிரம்மாண்டமான சினிமா ப்ரொஜெக்டராக மாறிவிடுகின்றன. மேலும் காரின் முன்பக்கம் இருக்கும் சுவரிலோ அல்லது பெரிய திரையிலோ சுமார் 100 முதல் 120 இன்ச் அளவுள்ள முழு வண்ணக் காட்சிகளை (Full-color) இதனால் துல்லியமாக ஒளிபரப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஸ்மார்ட்போன் அல்லது காரின் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பை இணைத்து திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை ரசிக்க முடியும். அதுமட்டுமல்லாமல், தரையையே ஒரு மாபெரும் திரையாக மாற்றி வீடியோ கேம்களையும் விளையாடும் வசதியை இந்த அதிநவீன அமைப்பு வழங்குகிறது.
இந்த அசத்தலான தொழில்நுட்பத்தின் பின்னணியில் RGB (Red, Green, Blue) வண்ண அமைப்பு செயல்படுகிறது. சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய மூன்று அடிப்படை வண்ணங்களை வெவ்வேறு அளவில் கலந்து, ஹெட்லைட்டுகள் கோடிக்கணக்கான வண்ணங்களை உருவாக்குகின்றன. இதனால் திரைப்படங்களில் காணப்படும் தரத்தில் தெளிவான மற்றும் வண்ணமயமான காட்சிகளை திரையிட முடிகிறது. அதனால்தான் இந்த ஹெட்லைட்டுகள் சிறிய சினிமா ப்ரொஜெக்டர் போல செயல்பட்டு, சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்குகின்றன.
இதுதவிர இரவு நேரத்தில் சாலையில் குறியீடுகளைப் பிரதிபலிப்பது, பாதசாரிகளுக்கான வழியைக் காட்டுவது எனப் பாதுகாப்பு ரீதியாவுகம் இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது.
இந்த புதிய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு எப்போது வரும்?
இந்த வியப்பூட்டும் தொழில்நுட்பம் இந்திய வாகனச் சந்தைக்கு இப்போது உடனடியாக வர வாய்ப்பில்லை. அதாவது எக்ஸ்பிக்ஸல் மற்றும் முழுமையான RGB ஹெட்லைட் தொழில்நுட்பம் ஆனது சீனா மற்றும் சில சர்வதேச சந்தைகளில் மட்டுமே விற்பனையாகும் மிகவும் விலை உயர்ந்த அதிநவீன மின்சாரக் கார்களில் (AITO M9, Stelato S9 போன்றவை) மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இன்னும் இந்திய சந்தைக்குள் கால் பதிக்கவில்லை.
அதேபோல் சாலையோரம் நிறுத்திவிட்டு, சுவர்களில் படம் பார்க்கும் அளவிற்கான உள்கட்டமைப்பும், அமைதியான திறந்தவெளிச் சூழலும் (Open-air drive-in spaces) தற்போதைக்கு மிகவும் குறைவு.
இந்தியாவில் பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற சில சொகுசு கார்களில் சாலையில் எச்சரிக்கை குறியீடுகளை காட்டும் டிஜிட்டல் லைட் வசதி உள்ளது. ஆனால், முழு வண்ண சினிமா காட்சிகளை திரையிடும் RGB ஹெட்லைட் தொழில்நுட்பம் கொண்ட கார்கள் இன்னும் மிகவும் அரிதானவை. அத்தகைய கார்களை (Cars) இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய வேண்டுமெனில், அவற்றின் விலை பல கோடி ரூபாய்களை எட்டக்கூடும். ஆகவே நடுத்தர மற்றும் பட்ஜெட் கார் சந்தையைக் கொண்ட இந்தியாவில் இதற்கான வரவேற்பு தற்போதைக்குக் குறைவுதான்.
இந்தியாவில் டிவிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கார்களின் உள்புற விளக்குகளில் RGB தொழில்நுட்பம் ஏற்கனவே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதே தொழில்நுட்பத்தை கார் ஹெட்லைட்டுகளில் பயன்படுத்தி சினிமா காட்சிகளை திரையிடும் வசதி இந்தியச் சாலைகளில் பொதுவாக அறிமுகமாக இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.
photo credits: CN Technology Launch Event/YouTube, aol,


Click it and Unblock the Notifications