தொழில்நுட்ப உலகின் புதிய சகாப்தம்.. அடேங்கப்பா விலையில் Apple-ன் முதல் MR ஹெட்செட் ஆன Vision Pro அறிமுகம்!
நேற்று இரவு தொடங்கிய ஆப்பிளின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டின் (Apple annual Worldwide Developers Conference - WWDC 2023) போது ஆப்பிளின் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் (Apple First Mixed Reality) ஆன விஷன் ப்ரோ (Vision Pro) அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஐசைட் உடன் கூடிய உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது, இது அணிபவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களை பற்றி விழிப்புடன் இருக்க அனுமதிக்கிறது. மேலும் இந்த டிவைஸ் கண் மற்றும் குரல் கட்டுப்பாட்டு ஆதரவையும் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இது பல சென்சார்கள் மற்றும் கேமராக்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) தொழில்நுட்பங்களையும் ஆதரிக்கிறது. உள்ளே எக்கச்சக்கமான தொழில்நுட்பங்கள் இருப்பினும் ஆப்பிளின் இந்த புதிய மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் ஆனது அலுமினிய ஃப்ரேம் மற்றும் கிளாஸ் டிஸ்பிளேவுடன் கூடிய ஸ்கை காகிள்ஸ் (Ski goggles) போலவே உள்ளது. இதன் விலை என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:
ஆப்பிள் விஷன் ப்ரோவின் அம்சங்கள்: ஆப்பிள் விஷன் ப்ரோவின் இரண்டு பேனல்களிலும் 23 மில்லியன் பிக்சல்கள் கொண்ட டூயல் மைக்ரோ ஓஎல்இடி டிஸ்பிளேக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஹெட்செட் ஒரு தனிப்பயன் 3டி லென்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது அணிபவர்களுக்கு - தங்கள் பார்வையில் - ஏஆர் கன்டென்ட்டை பார்க்க அனுமதிக்கிறது.
மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படத்தைக் காட்ட இது ஃபோவேட்டட் ரெண்டரிங்கை கொண்டுள்ளது. மேலும் அதிவேக மெயின் கேமராக்கள், கை கண்காணிப்புக்கான கீழ்நோக்கிய கேமராக்கள், ஐஆர் இல்லுமினேட்டர்கள் மற்றும் சைடு கேமராக்கள் உள்ளிட்ட முழு சென்சார் வரிசையையும் இந்த ஹெட்செட் கொண்டுள்ளது.
மேலும் இது லிடார் ஸ்கேனர் மற்றும் ட்ரூ டெப்த் கேமராக்களையும் கொண்டுள்ளது, இதன் மூலம் டிவைஸின் கீழ் உள்ள இடத்தை கண்காணிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும். ஆப்பிளின் கூற்றுப்படி, இதில் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்பேஷியல் ஆடியோவை வழங்கும் இரண்டு தனித்தனியாக ஆம்ப்ளிஃபைடு செய்யப்பட்ட ட்ரைவர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஆனது ஆப்பிளின் சக்திவாய்ந்த எம்2 சிப் மற்றும் எம்2-வை அடிப்படையாகக் கொண்ட ஆர்1 எனப்படும் புதிய சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 கேமராக்கள், ஐந்து சென்சார்கள் மற்றும் ஆறு மைக்ரோஃபோன்களை ஆதரிக்கிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஹெட்செட் 12எம்எஸ்-க்குள் படங்களைக் காண்பிக்கும் என்றும் ஆப்பிள் கூறுகிறது. பாதுகாப்பை பொறுத்தவரை, இந்த ஹெட்செட் பயனரின் கருவிழியை ஸ்கேன் செய்யக்கூடிய புதிய ஆப்டிக் ஐடி அம்சத்துடன் வருகிறது. மேலும் இந்த ஹெட்செட் விஷன்ஓஎஸ் (visionOS) எனப்படும் புதிய இயக்க முறைமையின் கீழ் இயங்குகிறது.
இது ஒரு நிகழ்நேர துணை அமைப்பு, இடஞ்சார்ந்த ஆடியோ இயந்திரம், ஒரு மல்டி-ஆப் 3டி இயந்திரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த ஒரு ஃபோவேட்டட் ரெண்டரர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, விஷன்ஓஎஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆனது ஐஓஎஸ் மற்றும் இடஞ்சார்ந்த கட்டமைப்புகளுடன் இணக்கமானது.
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்போது, இது ஏஆர்-மேம்படுத்தப்பட்ட உள்ளடக்கத்திற்கான ஆதவுடன் வரும். இதற்காக ஆப்பிள் நிறுவனம் டிஸ்னியுடன் கூட்டு சேர்ந்துள்ளது.மேலும் ஆப்பிள் நிறுவனமானது ஜூம், சிஸ்கோ வெப்எக்ஸ், அடோப் லைட்ரூம், மைக்ரோசாப்ட், வேர்ட், எக்செல் மற்றும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்ளிட்ட பல ஆப்களுக்கான ஆதரவையும் அறிவித்துள்ளது.
ஆப்பிள் விஷன் ப்ரோ விலை மற்றும் விற்பனை: இந்திய ரூபாய் மதிப்பின்படி இதன் விலை தோராயமாக ரூ.2,88,700 ஆகும். இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆப்பிள்.காம் (Apple.com) மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக விற்பனைக்கு வரும். இந்தியா உட்பட பிற சந்தைகளில் இந்த ஹெட்செட் எப்போது கிடைக்கும் என்பது குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications








