புதிய ஆகாஷ் டேப்லெட்டை பரிசோதிக்கும் மும்பை ஐஐடி!

குறைகளை களைந்து, புதிய வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஆகாஷ் டேப்லெட்டை மும்பை தொழில்நுட்ப கழக வல்லுனர்கள் தற்போது பரிசோதித்து வருகின்றனர்.
உலகின் மிகக் குறைந்த விலை டேப்லெட்டான ஆகாஷ் டேப்லெட்டில் பல குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தற்போது புதிய ஆகாஷ் டேப்லெட் தயாரிக்கும் பணிகளை இங்கிலாந்தின் டேட்டாவிண்ட் நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. ஏறக்குறைய இந்த புதிய ஆகாஷ் டேப்லெட்டின் தயாரிப்பு இறுதி நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஐஐடி பாம்பே ஆகாஷ் டேப்லெட்டை பரிசோதனை செய்து வருவதாக டேட்டாவிண்டின் தலைமை இயக்குனர் திரு.சுனித் டூலி கூறியிருக்கிறார். மேலும் ஆகாஷ் டேப்லெட்டின் 100 மாதிரிகள் ஐஐடி பாம்பேக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய தொலைத் தொடர்பு அமைச்சர் திரு.கபில் சிபலும் ஜூன் மாத இறுதிக்குள் ஆகாஷ் டேப்லெட்டின் பரிசோதனை முடிந்துவிடும் என்று அறிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதனம் டேட்டாவிண்ட் நிறுவனம் ஆகாஷ் டேப்லெட்டை இந்திய மனித வளத் துறைக்கு ரூ.2,276க்கு விற்பனை செய்தது.
இந்திய அரசு இந்த டேப்லெட்டை 1 லட்சம் மானவர்களுக்கு ரூ.1100 முதல் ரூ.1200க்குள் மானிய விலைக்கு விற்பனை செய்தது. இருந்தாலும் ஐஐடி ராஜஸ்தான் ஆகாஷ் டேப்லெட் அவ்வளவு தரமாக இல்லை என்று கூறி இந்த டேப்லெட்டை நிராகரித்தது.
அதனால் புதிய ஆகாஷ் டேப்லெட் தயாரிப்பு பணி மும்பை தொழில்நுட்ப கழகத்திடம் வழங்கப்பட்டது. எனவே இந்த ஆகாஷ் டேப்லெட்டின் தயாரிப்பு மிக விரைவாக நடந்து வருகிறது. இதற்கிடையில் டேட்டாவிண்ட் தனது வர்த்தக டேப்லெட்டை கடந்த ஏப்ரல் மாதம் ரூ.3000லிருந்து ரூ.4000க்குள் களமிறக்கியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications