கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப்: கர்நாடக அரசு அறிவிப்பு
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டு மக்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில், தகுதியுள்ள கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப்களை கர்நாடக அரசு வழங்க உள்ளதாக, மாநில முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார்.

சமீபத்திய தகவலின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சுமார் 31 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவியருக்கு லேப்டாப்களை இலவசமாக வழங்க உள்ளதாக, கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம் குறிப்பிட்ட மாணவ, மாணவியருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் திட்டமாக இது அமையும் என்று தெரிகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து இலவச லேப்டாப்களிலும் கர்நாடக அரசின் சின்னமும் முதல்வர் சித்தராமையாவின் படங்களும் உள்ள இரு ஸ்டிக்கர்கள் மேற்பகுதியில் காணப்படும்.
இது குறித்து ஒரு அதிகாரி ஐஏஎன்எஸிடம் கூறியதாவது, "லேப்டாப் ஒன்றிற்கு ரூ.14,490 என்ற விலையில், ஒப்பந்த முறையில் ரூ.45 கோடி செலவிலான ஏசர் லேப்டாப்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மாநில அரசால் இயக்கப்படும் 412 கல்லூரிகள், மாநில அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் மற்றும் 85 பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவியரின் தேவை பூர்த்தி செய்யப்படும்" என்றார்.
இந்த இலவச லேப்டாப்களில் விண்டோஸ் 10 பதிப்பு உடன் இன்டேல் குவாட் செயலி, 1 டெராபைட் (டிபி) ஹார்டு டிரைவ், 4 ஜிகாபைட் (ஜிபி) ரேன்டம் அக்சிஸ் மெம்மரி மற்றும் ஒரு 14 இன்ச் ஸ்கிரீன் ஆகியவை காணப்படுகிறது. இந்த வகையில், மாணவ பருவத்திற்கு இது ஒரு சிறந்த திட்டமாக அமைகிறது.
இது குறித்து அதிகாரி மேலும் கூறுகையில், "மாநில அரசு உயர்கல்வி துறை மூலம் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படிக்கும் கல்லூரிகளின் வாயிலாக இரு வாரங்களில், அனைத்து லேப்டாப்களும் விநியோகிக்கப்பட உள்ளன" என்றார்.
2017-2018 நிதியாண்டில் மாநிலத்தில் உள்ள எல்லா பிரிவுகளைச் சேர்ந்த 1.8 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கும் வகையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.300 கோடி நிதியை ஒதுங்கீடு செய்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் தொழில்சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப்களை வழங்கும் திட்டம், கடந்தாண்டு ஜூலை மாதமே கர்நாடக அரசால் முன்வைக்கப்பட்டாலும், நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.
இது குறித்து அதிகாரி மேலும் கூறுகையில், "பொது மற்றும் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த ஏனைய மாணவ, மாணவியருக்கு 1.5 லட்சம் லேப்டாப்களை விரைவில் வழங்கும் வகையில், அவற்றை வாங்குவதற்கான தனி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது" என்றார்.
மாநில வளர்ச்சியின் மற்றொரு திட்டமாக, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவது குறித்து கடந்த செவ்வாய் கிழமை, மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு 2018-2019 நிதியாண்டில் ரூ.185 கோடி நிதி தேவைப்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications