AI-க்கு வேலை கொடுத்து சிக்கலில் மாட்டிய மைக்ரோசாப்ட், ஊபர்! நடந்தது என்ன? இதோ முழு விவரம்..
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று மனிதர்கள் செய்து வந்த பல வேலைகளை மெல்ல மெல்ல தன்வசமாக்கி வருகிறது. அதுவும் கஸ்டமர் சர்வீஸ், ஹெச்.ஆர்., கோடிங் போன்ற அலுவலக பணிகளில் ஏஐ மற்றும் தானியங்கி முறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பல நிறுவனங்கள் மனிதர்களின் பங்களிப்பை குறைத்து, தொழில்நுட்பத்தை நம்பத் தொடங்கியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழக்கும் நிலை உருவாகி வருகிறது.
மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ மற்றும் ஏஐ ஏஜெண்டுகளை பயன்படுத்தினால் சம்பள செலவைக் குறைத்து,நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க முடியும் என்பதுதான் பல முன்னணி டெக் நிறுவனங்களின் முக்கிய எண்ணமாக உள்ளது. ஒரு ஏஐ கருவி 5 மனிதர்கள் செய்யும் பணியையும் திறம்பட செய்து விடும் என்று அவர்கள் கருதுகின்றனர். இதன் விளைவாக, பல நிறுவனங்கள் ஏஐ பயன்பாட்டை அதிகரித்து, மனித ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. ஆனால் தற்போது இது பெரிய தவறாக முடியும் என்று மைக்ரோசாஃப்ட் மற்றும் ஊபர் போன்ற நிறுவனங்கள் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளன.

அதாவது மிகவும் பிரபலமான டெக் நிறுவனம் தான் மைக்ரோசாப்ட். இந்நிறுவனம் 6 மாதங்களுக்கு முன்பு தான் கோடிங் வேலைகளுக்கு கிளாட் கோடிங் ஏஐ ஏஜெண்டிக் உரிமத்தை பெற்று தங்களுடைய பல்வேறு பரிவுகளில் கோடிங் வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்தது. ஆனாலும் இது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆகவே ஆறு மாதத்திலேயே தங்களுடைய பெரும்பாலான கிளாட் கோடு உரிமங்களை ரத்து செய்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் பொறியாளர்களை மீண்டும் அந்த வேலைகளுக்கு நியமனம் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் ஊபர் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி சமீபத்தில் கொடுத்த பேட்டியில், ஊபர் நிறுவன செயல்பாடுகளை ஏஐ தொழில்நுட்பத்திற்கு படிப்படியாக மாற்றத் திட்டமிட்டு அதற்காக 2026-ம் ஆண்டில் ஏஐ பயன்பாட்டுக்கு என்று பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த பட்ஜெட் 4 மாதங்களில் காலியாகிவிட்டது என்று கூறியுள்ளது. எனவே மனிதர்களை விட ஏஐ இடம் வேலைவாங்க அதிக செலவாகிறது என்பதை இந்த இரண்டு நிறுவனங்கள் கூறி வருகிறது.
மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மற்றும் ஊழியர்களை அதிக அளவில் ஏஐ கருவிகளை வைத்து வேலை செய்ய சொல்வது ஆகியவை நிறுவனங்களின் செலவுகளை எதிர்பாராத அளவில் உயர்த்தி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவே மைக்ரோசாஃப்ட் மற்றும் ஊபர் போன்ற நிறுவனங்கள் தற்போது கவலை தெரிவிக்க காரணமாக அமைந்துள்ளது.
மேலும் சமீபத்தில் என்விடியா நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரயன் ஆக்சியோஸ் தளத்திற்கு அளித்த பேட்டியில், "ஒரு வேலையை மனிதர்களை வைத்து முடிப்பதற்கான செலவை விட, அதையே ஏஐ மூலம் செய்து முடிக்க வேண்டிய செலவு அதிகமாக உள்ளது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஏஐ தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மேம்பட்டு அதிக திறனுடன் செயல்பட தொடங்கும் போது, அதற்கேற்ப நிறுவனங்களின் செலவுகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றன என்பதே இந்த துறையின் நிபுணர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்தாக உள்ளது.

அதுவும் பெரிய லாங்குவேஜ் மாடல்கள் போன்ற ஏஐ கருவிகளுக்கு பொதுவாக "டோக்கன்" அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கருவிகள் அதிக திறனுடன் செயல்பட அதிக டோக்கன்களை பயன்படுத்த வேண்டி வருகிறது. டோக்கன் பயன்பாடு அதிகரிக்கும் போது, நிறுவனங்களின் செலவுகளும் கணிசமாக உயர்கின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே பல நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதிச் சுமையாக மாறி வருகிறது.
ஏஐ மனிதர்களின் வேலை வாய்ப்புகளை பாதிக்கும் சூழலில், இந்த தகவல் பலருக்கும் ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. காரணம், ஏஐ பயன்பாட்டால் செலவுகள் தொடர்ந்து அதிகரித்தால், நிறுவனங்கள் மீண்டும் மனித ஊழியர்களை நம்பும் நிலைக்கு திரும்பும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications