Truecaller பயனர்களுக்கு மாஸ் அப்டேட்.. இனி SMS வச்சி ஒன்னும் பண்ண முடியாது!
Truecaller நிறுவனம் தனது பயனர்களை ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எஸ்எம்எஸ் பாதுகாப்பு ( AI-based SMS fraud protection ) வசதியை வழங்கியுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மூலம் ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் எளிதாக தப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன. இது போன்ற குற்றங்களை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செய்து வருகின்றன. அதேபோல விழிப்புணர்வு திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

பெரும்பாலும் போன் மூலமே சைபர் குற்றங்கள் நடப்பதால் அதிகளவில் பயனர்களை கொண்ட ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் ( WhatsApp ), இன்ஸ்டாகிராம் ( Instagram ), ட்விட்டர், ட்ரூகாலர் (Truecaller) போன்ற ஆப்ஸ் நிறுவனங்களும் தங்களது பாதுகாப்பு வசதியை அடிக்கடி அப்டேட் செய்து வருகின்றன.
அந்த வகையில், 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்ட ட்ரூகாலர் (Truecaller) நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய எஸ்எம்எஸ் ( SMS ) பாதுகாப்பு வசதியை வழங்கி உள்ளது. இந்த வசதியை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் வழங்க ட்ரூகாலர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக ட்ரூகாலர் மூலம் போலியான நம்பர்களில் இருந்து வரும் கால்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
அது போலவே, இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எஸ்எம்எஸ் பாதுகாப்பு வசதி மூலமும் போலியான நம்பர்களில் இருந்து வரும் எஸ்எம்எஸ்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதன் மூலம் எஸ்எம்எஸ் மூலம் நடக்கும் பெரும்பாலான சைபர் குற்றங்கள் தவிர்க்கப்படும் என்று ட்ரூகாலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொல்லப்போனால், ட்ரூகாலர் ஆப்பை பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களுக்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் மோசடி நபர்களிடம் இருந்து பல எஸ்எம்எஸ்கள் சென்றுள்ளன. அதில், மின்சார கட்டணம் செலுத்துதல், வங்கிகள் மூலம் லோன், வேலை வாய்ப்புகள் வழங்குதல், கேஒய்சி அப்டேட் (KYC Update), லாட்டரி உள்ளிட்ட மோசடி எஸ்எம்எஸ்களும் அடங்கும். இதனையறிந்த ட்ரூகாலர் நிறுவனம், பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளது. இந்த வசதி பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று ட்ரூகாலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி எப்படி வேலை செய்யும்? : உங்களிடம் ட்ரூகாலர் ஆப் இருக்கும் பட்சத்தில், மோசடி நபர்களிடம் வரும் எஸ்எம்எஸ்கள் ரெட் அலர்ட் நோட்டிஃபிகேஷன் உடன் தோன்றும். அப்படியென்றால் அந்த எஸ்எம்எஸ்களை நீங்கள் திறக்கவோ, படிக்கவோ கூடாது என்று அர்த்தமாகும். இருப்பினும், தவிர்க்க முடியாத சூழலில் நீங்கள் எஸ்எம்எஸ்களை திறந்துவிட்டாலும் கூட செயற்கை நுண்ணறிவு எஸ்எம்எஸ் பாதுகாப்பு வசதி அதை முடக்கி விடும்.
இதுகுறித்து ட்ரூகாலர் நிறுவனம் தரப்பில், எங்களது பயனர்கள் பல்வேறு மோசடி எஸ்எம்எஸ்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதுதொடர்பாக புகார்களும் வந்துள்ளன. இதனால் எங்களது கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். அதன் மூலம் பயனர்களின் எஸ்எம்எஸ்களை கட்டுப்பாட்டில் வைக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் பயனர்களின் தனியுரிமை கொள்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ட்ரூகாலர் பயனர்கள் எஸ்எம்எஸ் மோசடிகளை பற்றி கவலைக் கொள்ள வேண்டியது இருக்காது.


Click it and Unblock the Notifications








