பேடிஎம் இல் புத்தம் புதிய வசதி அறிமுகம் இனி அனைத்துக்கும் ஒரே QR கோடு!
உலகின் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி ஏராளமான வணிகர்களும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை ஆதரித்து வருகின்றனர். முன்னணி பேமன்ட் செயலியான பேடிஎம் (Paytm) வணிகர்களுக்கு மட்டுமான பிரத்தியேகமான செயலியை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.

பேடிஎம் ஃபார் பிசினஸ்
பேடிஎம் ஃபார் பிசினஸ் என்ற (Paytm for Business) செயலியை தற்பொழுது பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தச் செயலியை பேடிஎம் நிறுவனத்தின் முதுநிலைத் துணைத் தலைவர் சௌரப் ஷர்மா அறிமுகம் செய்து வைத்தார்.

பேடிஎம் இன் வளர்ச்சி
பேடிஎம் ஃபார் பிசினஸ் செயலியை அறிமுகம் செய்த பின் அவர் கூறியதாவது, 'கடந்த சில ஆண்டுகளாக பேடிஎம் இன் வளர்ச்சி சீராக இருக்கிறது. மக்கள் மத்தியில் பேடிஎம் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிகளவிலான வணிகர்கள் பேடிஎம்-ஐ பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்' என்று அவர் தெரிவித்தார்.

புதிய அம்சம்
வணிகர்களின் தேவையின் அடிப்படை மற்றும் அவர்களுக்கு எளிமையாகச் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், பேடிஎம் அவர்களுக்கு உதவும் வகையில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதில் முக்கிய அம்சமாகப் புதிதாக All-in-one QR கோடு என்ற சேவையை பேடிஎம் அறிமுகம் செய்துள்ளது.

All-in-one QR கோடு
இந்தப் புதிய All-in-one QR கோடு சேவையின் மூலம் பேடிஎம் UPI, RuPay கார்டு மற்றும் வாலெட் போன்றவை மூலம் பயனர்கள் மற்றும் வணிகர்கள் பணப்பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ள முடியும். மேலும், பேடிஎம் செயலியில் வணிகர்களுக்காக இன்னும் பல வசதிகளை பேடிஎம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனை
UPI மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் வெளியான தகவலின்படி கடந்த டிசம்பர் மாதம் மட்டும் சுமார் இரண்டு டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் UPI மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று NPCI (National Payments Corporation of India) தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications