உங்களின் PF பணம் எடுப்பதில் சிக்கலா? இனி WhatsApp மூலம் எளிதாக தீர்வு காணலாம்.!
லட்சக்கணக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, தொழிலாளர் அமைச்சகம் செவ்வாயன்று ஈபிஎஃப்ஒவின் வாட்ஸ்அப் அடிப்படையிலான குறை தீர்க்கும் ஹெல்ப்லைனை சேவையை அதன் சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களைப் இங்கு பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப் மூலம் பிஎஃப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
வாட்ஸ் ஆப் மூலமாகவே பிஎஃப் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் புதிய வசதியை வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பலருக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் போனது என்பதே உண்மை.

பொருளாதாரச் சலுகை
இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு, மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அரசு சில பொருளாதாரச் சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது.இதன் காரணமாக, ஊழியர்களின் PF சேமிப்புப் தொகையை தேவைப்படும் நபர்கள் உடனடியாக எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

பிஎஃப் பணத்தை எடுக்க வாய்ப்பு
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தொழிலாளர்களின் வைப்பு நிதியை உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமின்றி, முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதன்படி, இக்கட்டான சூழ்நிலையிலிருந்த ஊழியர்கள், அவர்களின் பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள்
பிஎஃப் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுப்பது என்றாலே பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உருவாக்குகிறது, இந்த சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்குத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல வாடிக்கையாளர் குறைதீர்ப்புச் சேவைகளை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

24 மணி நேர சேவை
UMANG ஆப்ஸ், EPFiGMS ஆன்லைன் போர்ட்டல், பேஸ்புக், டிவிட்டர் போன்ற பல வழிகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர் குறைதீர்ப்பு சேவையை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், இன்னும் சிலருக்கு இந்த முறைகளைப் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுப்பப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

இனி உடனடி தீர்வு காணலாம்
பிஎஃப் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைவருக்கும் எளிதாக இருக்கும்படி தற்பொழுது வாட்ஸ் ஆப் குறைதீர்க்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் அவர்களின் பகுதியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களின் சந்தேகங்களுக்குத் உடனடி தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஃப் அலுவலகங்களின் வாட்ஸ் ஆப் தொடர்பு எண்
இதன்படி, பிஎஃப் சேவை அமைப்பின் 138 பிராந்திய அலுவலகங்கள் தற்பொழுது வாட்ஸ் ஆப் மூலம் வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்கிறது. அந்தந்தப் பகுதியில் உள்ள பிஎஃப் அலுவலகங்களின் வாட்ஸ் ஆப் தொடர்பு எண்களை அமைப்பு தற்பொழுது வெளியிட்டுள்ளது. உங்கள் பிஃஎப் தொடர்பான சந்தேகங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

PF தொடர்பான சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப் எண்
- சென்னை வடக்கு - 9345750916
- சென்னை தெற்கு - 6380366729
- அம்பத்தூர் - 6380131921
- தாம்பரம் - 6380153667
- வேலூர் - 7397593330
- திருச்சி - 6380109286
- மதுரை - 9489938487
- திருநெல்வேலி - 9489987157
- நாகர்கோவில் - 6381122366
- கோயம்புத்தூர் - 9994255012
- சேலம் - 9080433650



Click it and Unblock the Notifications