நில அதிர்வைத் தெரியப்படுத்தும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பம்!
நில அதிர்வின் தொடர்ச்சியான தாக்கம் எங்கு ஏற்படும் என்பதை செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாகக் கண்டறியலாம்.
மின்னல் இரு முறை தாக்குவதில்லை. ஆனால் நில அதிர்வு தொடர்ச்சியாக வரும் ஆபத்துள்ளது. நில அதிர்வின் தொடர்ச்சியான தாக்கம் எங்கு ஏற்படும் என்பதை செயற்கை அறிவுத் தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாகக் கண்டறியலாம். புவி அதிர்வு தோன்றியதைத் தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகள் மிகவும் அழிவை விளைவிக்கும். எனவே, அதனை முன்கூட்டியே கணிப்பது அவசியம்.

பிந்தைய நில அதிர்வுகள் எங்கு நிகழும், அதனுடைய தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நில அதிர்வு நிபுணர்கள் முறைப்படி கண்டறிந்தாலும் அது முழுமையான நம்பகத் தன்மையுடன் இருப்பதில்லை.

ஆழமாய் அறிதல்
எனவே ஆராய்ச்சியாளர்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் மற்றும் பிந்தைய அதிர்வுகள் குறித்தத் தகவல்களைச் சேகரித்து அதனை ஆய்வு செய்தனர். அதன் மூலம் நில அதிர்வுகளையும் பிந்தைய அதிர்வுகளையும் சரியாகக் கணிக்க முற்பட்டனர்.
இந்த ஆய்வு முறைக்கு "ஆழமாய் அறிதல்" என்னும் பொருள் தரக்கூடிய - deep learning - என்னும் பெயர் கொண்ட செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்தைப் (AI) பயன்படுத்துகின்றனர். மனித மூளையின் செயற்பாட்டை முன் மாதிரியாகக் கொண்டு இந்தத் தொழில் நுட்பம் இயங்குகிறது.

புவி அழுத்தம்
"இந்த முறையின் மூலமாக மிகத் துல்லியமாக பிந்தைய அதிர்வுகளைக் கண்டறிய முடிகிறது" என்கிறார் ஹார்வார்டு பல்கலைக்கழக முது முனைவர் பட்ட ஆய்வாளர் போய்ப் டிவிரிஸ் (Phoebe DeVries).
"பெரிய அளவில் ஏற்பட்ட நில அதிர்வுகளின் தன்மைகள், தாக்கங்கள் அதனுடைய புவி அழுத்தம் ஆகியவற்றை முதலில் ஆராய்கின்றனர். இந்த முடிவுகளை, அதனைந் தொடர்ந்து ஏற்பட்ட அதனுடைய பிந்தைய அதிர்வுகள் எவ்விடங்களில் நிகழ்ந்தன என்னும் புள்ளி விவரங்களோடு ஒப்பிட்டு ஆராய்கின்றனர். அந்த முடிவுகளைக் கொண்டு ஒரு வரைபடத்தை உருவாக்குகின்றனர்." என்று, இந்த ஆய்வின் முக்கியமான செயல் முறையை விளக்குகிறார், புவி மற்றும் கிரக அறிவியல் துறைப் பேராசிரியர், பிரன்டன் மியேட் (Brendan Meade).

மென்பொருள்
ஆய்வாளர்கள் தாங்கள் சேகரித்த தகவல்களின் நான்கில் ஒரு பகுதியை தங்களிடம் வைத்துக் கொண்டு மீதமுள்ள தகவல்களைத் திட்ட மென் பொருளில் பதிவேற்றம் செய்கின்றனர்.
பிந்தைய அதிர்வுகள் ஏற்பட்ட இடங்கள் குறித்துத் தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்டாத 25 சதவிகித தகவல்களை, திட்ட மென்பொருள் எவ்வாறு கணிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் சோதித்துப் பார்க்கின்றனர்.

கிரிகரி பெரோசா
ஆபத்து மிகுந்த பகுதிகள் என திட்ட மென்பொருள் கண்டு உணா்த்திய 6 சதவிகிதப் பகுதிகள் பிந்தைய அதிர்வுகளைச் சந்தித்த பகுதிகள் ஆகும்.
"இந்த ஆய்வு பற்றி தற்போது முழுமையான முடிவுக்கு வர இயலாது. நேரடியான ஆய்வுகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்" என எச்சரிக்கை உணர்வுடன் கூறுகிறார், ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் புவிஇயற்பியல் பேராசிரியர், கிரிகரி பெரோசா (Gregory Beroza).
"பிந்தைய நில அதிர்வுகளுக்குக் காரணமான புவியதிர்வுகளின் ஒரு பகுதியை மட்டும் மையப்படுத்தியதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது" என இவர் கூறுகிறார்.
"முழுவதும் உறுதியற்ற காரணிகளைச் சார்ந்து இந்த ஆய்வுகள் அமைந்துள்ளன என்பதும் என்னுடைய எச்சரிக்கைக்குக் காரணம்" என்கிறார் பெரோசா.
"பிந்தைய நில அதிர்வுகள் எங்கு நிகழ்கின்றன என்பதறகான காரணிகள் குறித்து இன்னும் ஆராய வேண்டியுள்ளது." எனப் பெரோசாவின் கருத்தை ஏற்றுக் கொள்கிறார், ஆய்வாளர் போய்ப் டிவிரிஸ் (Phoebe DeVries).
"இந்த ஆய்வுப்பணி இன்னும் முடிவை எட்டவில்லை. இது நம்பிக்கை அளிக்கும் தொடக்கம்தான்" என அவர் ஒத்துக் கொள்கிறார்.

ஆய்வாளர்கள்
செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்தை பிந்தைய நில அதிர்வுகளைக் கண்டறிவதற்கு எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான நல்ல ஆய்வுத் தளத்தை இந்த முயற்சிகள் உருவாக்கியுள்ளன.
"சேகரிக்கப்பட்ட ஏராளமான மற்றும் சிக்கலான தரவுகளின் வழியாக வேண்டிய முடிவுகளைக் கொண்டு வரும் கணினிப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஆய்வு மூலங்களாக விளங்குகின்றன. இருந்தாலும் பிந்தைய அதிர்வுகளைக் கண்டறிதற்கான ஆய்வுகளில் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியுள்ளது" என்கின்றனர் ஆய்வாளர்கள்.


Click it and Unblock the Notifications