நெய்பர்லி அப்ளிகேசன் : நம்முடைய நகரத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கூகுளின் புதிய செயலி.!
ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள், ஒருவர் மற்றொருவரோடு தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்பதன் மூலமாக அவர்களுக்குத் தேவையான தகவல்களை நம்பகமான முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இணையதளச் சேவையில் கொடிகட்டிப் பறக்கும் கூகுள், இந்தியப் பயனாளர்களின் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறது. தன்னுடைய புதிய தொழில் நுட்பங்களை இந்தியச் சூழலுக்கு ஏற்ப உடனடியாக அறிமுகப்படுத்துவதில் அக்கறை காட்டுகிறது கூகுள்நிறுவனம். தேஜ் மொபைல் பேமென்ட் அப்ளிகேசன், கூகுள் ஏரியோ, கூகுள் ஸ்டேசன், யூடியூப் கோ போன்ற செயலிகளை அறிமுகப்படுத்தி இந்தியப் பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது கூகுள். அந்த வகையில் சமீபத்தில் நெய்பர்லி (Neighbourly) என்னும் புதிய சமூகப் பயன்பாட்டுச் செயலியை மும்பையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

கூகுளின் தொழில்நுட்ப அணியான நெக்ஸ்ட் பில்லியன் யூசர்ஸ் குழுவினர் இந்தப் பயன்பாட்டுச் செயலியை உருவாக்கியுள்ளனர். நாம் வசிக்கும் ஊரைப் பற்றிய தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு அதன் மூலமாகப் பயனடையும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு மும்பையில் உள்ள ஆன்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் இந்தச் சேவை கிடைக்கும். பிற்காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இச்செயலியை விரிவுபடுத்த கூகுள் திட்டமிட்டுள்ளது.

நின்று பதில் சொல்ல முடியாத பரபரப்பான வாழ்க்கை முறை
ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள், ஒருவர் மற்றொருவரோடு தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்பதன் மூலமாக அவர்களுக்குத் தேவையான தகவல்களை நம்பகமான முறையில் பெற்றுக்கொள்ள முடியும். நகரத்தில் உள்ள முகவரிகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிப்பது மிகக் கடினம். காரணம், நகரங்களில் மாற்றங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. மக்களும் மாறிக் கொண்டு வருகின்றனர்.
“நகரத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள், அது பற்றிப் பிறருக்கு, நின்று, நிதானமாகத் தெரிவிக்க நேரம் இன்றி மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் உள்ள குழுவினர் தங்களுக்கிடையே அவ்வப்போது மட்டுமே உபயோகமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.” என்கிறார், நெக்ஸ்ட் பில்லியன் யூசர்ஸ் குழுவின் துணைத் தலைவர், சீசர் சென்குப்தா. இந்தச் சூழ்நிலையில்தான் நெய்பர்லி அப்ளிகேசனின் துணை நமக்குத் தேவையாக இருக்கிறது.

8 இந்திய மொழிகளில் பயன்படுத்தலாம்
நெய்பர்லி அப்ளிகேசன் வழியாக ஒரு பயனாளர் கேட்கும் கேள்வி, அக்கேள்விக்குத் தகுந்த பதில் அளிப்பவரைப் போய்ச் சேர்கிறது. கூகுளின் குரல் உள்ளிடல் வழியாகவும் கேள்விகள் கேட்கவோ அல்லது பதில் சொல்லவோ முடியும். இந்த அப்ளிகேசனில் ஆங்கிலம் மட்டும் அல்லாமல் 8 இந்திய மொழிகளையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத் தக்கது.
நாம் வசிக்கும் பகுதியைப் பற்றிய தகவல் களஞ்சியம்
நீங்கள் வசிக்கும் பகுதியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல் என்னும் அறிவுக் களஞ்சியத்தை பிறருடைய பயன்பாட்டுக்காக திறந்து விடுவதற்கு இந்தச் செயலி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. சமூக நிகழ்வுகள் நடக்கும் இடங்கள், பொருட்களுக்கான சந்தைகள் உள்ள இடங்கள் போன்றவற்றைத் தேடிச் செல்பவர்களுக்கு இந்தச் செயலி மிகுந்த பயனைத் தரும். கூகுள் மேப்பைப் போல இது ஒரு வழி காட்டியாகவும் செயல்படுகிறது.
தகவல் பாதுகப்பு அம்சங்கள்
இந்த அப்ளிகேசனில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதவாவது, இந்தச் செயலியின் வழியாக நீங்கள் கேள்வி கேட்கலாம், பதில் சொல்லலாம். ஆனால், உங்களுடைய அடையாளம் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் எதனையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய பெயர், மொபைல் எண், முகவரி போன்றவற்றின் ரகசியம் கூகுள் நிறுவனத்தால் பாதுகாக்கப்படும். நெய்பர்லி செயலியில் இணைபவர்கள், ஒருவருக்கொருவர் மற்றவர்களுடைய உரிமைகளையும், நல்லுறவையும் பாதுகாத்து மேம்படுத்துவேன் என்கின்ற உறுதி மொழியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இப்போதே பதிவிறக்கம் செய்யலாம்…
தற்போது இந்தச் செயலியின் பயன்பாடு, மும்பையில் வசிக்கும் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விரைவில் பிற பகுதியைச் சேர்ந்தவர்களையும் இந்த வசதி சென்றடையும். உங்களுடைய ஸ்மார்ட் போனில் ஆன்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் அல்லது அதைவிட உயர் அப்ளிகேசன் இருந்தால் இந்த நெய்பர்லி செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 7 எம்.பி.-க்கும் குறைவான இடவசதியே இதற்குப் போதுமானது. ஆப் லைனிலும் இச்செயலி இயங்கும். செயலியில் இணைந்துள்ள பயனாளர்கள் பகுதி வாரியாகப் பிரிக்கப்படுவர். அதாவது, பாந்த்ரா மேற்கு, பாந்த்ரா கிழக்கு, சாந்தா குரூஸ் மேற்கு, சாந்தா குரூஸ் கிழக்கு என்னும் வகையில் பிரிக்கப்படுவர். எனவே நீங்கள் கேட்கும் கேள்விகள் குறிப்பிட்ட பகுதிகளோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். மும்பையின் மேற்குப் பகுதியான பாந்த்ராவில் அமர்ந்து கொண்டு மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கொலாபா மார்க்கெட்டைப் பற்றிக் கேள்வி கேட்கக் கூடாது.

அருகில் வசிப்பவர்கள் மேலும் நெருக்கமாக உணர வாய்ப்பு
“கூகுளில் உள்ள தேடுபொறி, தகவல்களைத் தேடுபவர்களை இணையம் வழியாக இணைக்கிறது. அதைப் போல, நெய்பர்லி பயன்பாட்டுச் செயலி, நாம் வசிக்கும் நகரத்தைப் பற்றிய தகவல்களை திரட்டித் தேவைப்படுவோருக்கும், தேடுபவர்களுக்குத் தருகிறது. நம்முடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை, நாம் வசிக்கும் பகுதியைச் சுற்றியே வாழ்ந்து தீர்க்கிறோம். எனவேதான் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் மிகுந்த பயனடைய முடியும் எனக் கருதினோம். இந்தச் செயலியை உருவாக்கினோம். இந்தச் செயலியின் மூலம் ஒரே பகுதியில் வசிப்பவர்கள் மேலும் தங்களை நெருக்கமானவர்களாக உணர முடியும்.” என்கிறார், நெக்ஸ்ட் பில்லியன் யூசர்ஸ் குழுவின் தயாரிப்பு மேலாளர், ஜோஸ் வுட்வார்ட்.


Click it and Unblock the Notifications