5 லட்சம் பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சீன இணையதள நிறுவனங்கள்.! 11 பேர் கைது.!
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு ஆப் வசதியையும் கவனமாக பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு சில ஆப் வசதிகள் நமக்கு பெரும் சிகல்களை கொண்டுவந்துவிடும். இருந்தபோதிலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது சில பாதுகாப்பு இல்லாத ஆப் வசதிகளை நீக்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் இரண்டு ஆப் வசதிகளை நம்பிய 5 லட்சம் பேரிடம் ரூ.150 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அண்மையில் வெளிவந்த தகவலின்படி, ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் 150 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 11 நபர்களை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து டில்லி துணை போலீஸ் கமிஷனர் அனீஷ் ராய் கூறியது என்னவென்றால்,பவர் பேங்க் மற்றும் ஈஇசட் பிளான் (Power Bank and EZPlan) என்ற இரண்டு மொபைல் ஆப்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பல புகார்கள் வந்தன, அவற்றை நாங்கள் கண்காணிக்க துவங்கினோம்.

இதில் பவர் பேங்க் ஆப் வசதியானது பெங்களூருவை தளமாகக் கொண்டு இயங்கி வந்தது. ஆனால் அதன் சேவையகம் சீனாவை மையமாகக் கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும் இந்த ஆன்லைன் ஆப் மக்களை அதிக பணம் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு, ஆரம்பத்தில் முதலீடு செய்த பணத்தில் சுமார் 5 முதல் 10 சதவிகிதம் வரை ஒரு சிறிய தொகையை திரும்பக் கொடுத்துள்ளது.

இதைநம்பிய 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.150 கோடிக்கு மேல் அதில் முதலீடு செய்துள்ளனர். பின்பு நாங்களும் அதில் ஒரு தொகையை முதலீடு செய்து பண மோசடியைக் கண்டறிந்தோம்.

அதன்பின்பு அந்த ஆப் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை ஆய்வு செய்ததில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் விசாரணை செய்ததில், மேலும் 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும்,பொது மக்கள் ஆன்லைன் லோன் ஆப் பற்றிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும், ஏமாற்றப்பட்டால் உடனே புகார் கொடுக்க வேண்டும் என்று டில்லி துணை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








