பள்ளி மாணவன் உருவாக்கிய மொபைல் ஆப்ஸ்! 152 நாடுகளில் பயன்படுத்த கூகிள் அனுமதி!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் எல்லாம் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இவர்களை சரியான அறிவுரையின் கீழ் வழிநடத்திச் செல்லும் பெற்றோர்களின் பங்கை நிச்சயமாகப் பாராட்டியாக வேண்டும். வீடியோ கேம்ஸ் மற்றும் மொபைல் கேம்ஸ் விளையாடும் சிறுவர்களுக்கு மத்தியில், இப்பொழுது மொபைல் ஆப்ஸ் உருவாக்கும் சிறுவர்களும் அதிகம் உருவாகி வருகின்றனர். அப்படியான ஒரு திறமை சிறுவன் தான் சஞ்சய் குமார்.

கோவை, ராமநாதபுரம், சுசிலா நகரில் வசிக்கும் செந்தில்குமாரின் மகன் தான் சஞ்சய் குமார், இவருக்கு 16 வயது ஆகிறது. கோவை, உடையார்பாளையம் அத்வைத் ஜி.என்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் இவர் தானாக ஒரு மொபைல் 'ஆப்ஸை' உருவாக்கியிருக்கிறார். இவருடைய மொபைல் பயன்பாடு தற்பொழுது 152 நாடுகளில் அனுமதி பெற்றுப் பயன்படுத்தக் கிடைக்கிறது.

சிறு வயதிலிருந்தே கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவு படித்து வரும் சஞ்சய்குமார், தற்பொழுது அவரின் சொந்த முயற்சியில் 'செக்யூர் மெசெஞ்சர் (Secure Messenger)' என்ற புதிய மொபைல் ஆப்ஸை தானாக வடிவமைத்து உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கிய இந்த செக்யூர் மெசெஞ்சர் பயன்பாட்டிற்கான காப்புரிமையையும் அவர் தற்பொழுது பெற்றுள்ளார். சிறுவயதில் சொந்தமாக மொபைல் ஆப்ஸ் உருவாக்கியுள்ளார்.

இவரின் சாதனை குறித்து சஞ்சய் குமார் கூறியதாவது, ''இணையதளத்தில் தினமும் எப்படி மொபைல் ஆப் உருவாக்குவது, எப்படி அதைப் பிழை இல்லாமல் வடிவமைப்பது போன்ற பல்வேறு விஷயங்களைப் பார்த்து கற்று வந்தேன். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்து வருவதால், இணையத்தில் பார்த்த விஷயங்கள் எலாம் எளிதாக புரிந்தது. கற்றுக்கொண்ட கல்வியின் மூலம் 'செக்யூர் மெசெஞ்சர்' என்ற ஆப்-ஐ நான் உருவாக்கினேன்.'' என்று மாணவன் கூறியுள்ளார்.

செக்யூர் மெசெஞ்சர் பயன்பாட்டிற்கான காப்புரிமைக்காக 'பிளே கன்சோல்' என்ற தளத்தில் பதிவு செய்து. அதில், இந்த 'ஆப்' பற்றிய வடிவமைப்பு, போட்டோ, வீடியோ உள்ளிட்ட தகவல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்த்த பின் பாதுகாப்பு, புதுமையான விஷயங்கள் ஆய்வு செய்த பிறகு தன்னுடைய மொபைல் ஆப் பிளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கூகிள் பிளே ஸ்டோரில், இந்த பயன்பாடு VPN இல்லாமல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 152 நாடுகளில் தன்னுடைய செக்யூர் மெசெஞ்சர் ஆப்ஸ் பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளது.

இதுவரை சுமார் 600 பேருக்கு மேல் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றும் மாணவன் கூறியுள்ளார். வீடியோ கால், சேட், தீம்ஸ், ஸ்டிக்கர்ஸ், குரூப் சேட் போன்று வாட்ஸ்ஆப் இல் கிடைக்கும் பல அம்சங்கள் இவர் உருவாகியுள்ள பயன்பாட்டிலும்உள்ளதாம். மாணவனின் இந்த புதிய முயற்சிக்கு நம்முடைய பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications