ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆப் உருவாக்கி கொடுத்த மருத்துவர் கைது! என்ன ஆப் தெரியுமா?
காயமடைந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் மொபைல் ஆப் உருவாக்கி கொடுத்த பெங்களூருவை சேர்ந்த கண் மருத்துவர், என்.ஏ.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் டில்லியின் சாமினா பகுதியில் வசித்து வந்த ஜஹான்கான்சாகிப் சாமி வாணி மற்றும் ஷீனா பஷீர் பெஹ் என்ற தம்பதியினர் ஐஎஸ்ஐஎஸ் துணை அமைப்புடன் நேரடி தொடர்பில் இருப்பதாக என்ஏஐ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர்களை என்ஏஐ அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இறுதியில் இந்த தம்பதியினருக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தம்பதிகளில் தொடர்புகளை ஆராய்ந்த என்ஏஐ அதிகாரிகளுக்குப் பெங்களூருவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற 28 வயதான கண் மருத்துவர் மீது சந்தேகம் எழுந்தது, சந்தேகத்தின் பெயரில் அவரை கண்காணித்து வந்த காவல்துறையினருக்கு அவரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பது உறுதியானது.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று இவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் மெடிக்கல் ஆப் என்று அழைக்கப்படும் மருத்துவ உதவி செயலி ஒன்றை அவர் உருவாக்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல், அண்மையில் ஆயுதம் தொடர்பான ஒரு செயலியையும் இவர் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண் மருத்துவராக பணியாற்றி வரும் அப்துல் ரகுமான் 2014 ஆம் ஆண்டு சிரியாவிலிருந்து பயங்கரவாதிகளின் மருத்துவ முகாமிற்கு நேரடியாக சென்று மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி அங்கு பத்து நாட்கள் தங்கியிருந்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரை மேலும் விசாரிக்க என்ஏஐ அமைப்பு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications