ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கருத்து முரண்பாடு! சர்வதேச விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறும் வீரர்கள்!
வாசிங்டன் மற்றும் மாஸ்கோவுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலின் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது.
இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு ரஷ்ய விண்வெளி வீரர் ஆகிய மூவரும் இந்த வாரம் வியாழக் கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பூமிக்குத் திரும்பினர். வாசிங்டன் மற்றும் மாஸ்கோவுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலின் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மிகுந்த நட்புணர்வு நிலவிய சர்வதேச விண்வெளி நிலைய நடவடிக்கைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், ட்ரு ஃபியூஸ்டல் (Drew Feustel), ரிக்கி அர்னால்டு (Ricky Arnold) மற்றும் ரஷ்ய நாட்டு விண்வெளி வீரர் ஆலெக் அர்டிமயி (Oleg Artemyev) ஆகிய மூவரும் கஜகஸ்தான் நாட்டில் உள்ள ஜெஸ்காஸ்கன் நகரில் அமைந்துள்ள (Dzhezkazgan) விண்வெளி மையப் பகுதியில் தரையிறங்கினர்.
சில நாட்களுக்கு முன்பு, ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் டிமிட்ரி ரோகோஜின் (Dimitri Rogozin), ரஷ்யாவுக்கும் நாசாவுக்கும் இடையே விண்வெளி ஆய்வு நிலையம் தொடர்பாக “சிக்கல்கள்” எழுந்துள்ளதாக தன் வருத்தத்தை பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்கலத்தில் சிறிய ஓட்டை ஒன்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இதன் வழியே காற்று வெளியேறுகிறது. விண்கலத்தில் ஏற்பட்ட இந்தத் துளை திட்டமிட்டு வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ரஷ்ய நாட்டு விசாரணை அலுவலர்கள் கருதுகின்றனர். இது அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கு சங்கடமான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் (ISS) நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய நாட்டு விண்வெளி ஓடத்தில் சிறிய ஓட்டை விழுந்தததற்கு சதி வேலைதான் காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டுவதை அமெரிக்கா ஏற்கவில்லை.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல விசயங்களில் முரண்பாடுகள் நிலவிய போதும் அவை எதுவும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய ஒத்துழைப்பை இது வரை பாதிக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை விண்வெளி ஆய்வாளர்களிடையே கவலை அளிப்பதாக உள்ளது.
தற்போது பூமிக்குத் திரும்பிய மூன்று விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமான உணர்ச்சிப் பெருக்குடன் வழியனுப்பும் நிகழ்ச்சி சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடைபெற்றது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த அலெக்சான்டர் ஜெர்ஸ்ட் (Alexander Gerst), நாசாவைச் சேர்ந்த செரினா அவனான் (Serena Aunon-Chancellor), ரஷ்யாவைச் சேர்ந்த செர்கெ புரோகோப்யே (Sergey Prokopyev) ஆகிய மூவரும் உள்ளனர். இவர்கள் அடுத்ததாக பூமிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கஜகஸ்தானில் அமைந்துள்ள பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்தில் (Baikonur Cosmodrome) இருந்து சர்வதேச வி்ண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவைச் சேர்ந்த விண்கலம் ஒன்று அடுத்த வாரத்தில் ஏவப்படவுள்ளது.
ஹாலிவுட் உலக காமெடி நடிகர் ஜாக் பிளாக்கின் (Jack Black's) நாகோ லிப்ரே (Nacho Libre) என்னும் கதா பாத்திரம் உச்சரித்த புகழ்ப் பெற்ற வசனத்தை டுவிட்டரில் பதிவிட்டு, விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பியதைத் தன்னுடைய நண்பர்களுக்குத் தெரிவித்திருந்தார் அமெரிக்க விண்வெளி வீரர், ட்ரு ஃபியூஸ்டல் (Drew Feustel).

“ நான் என்னுடைய பெருமைமிகு நாட்களைச் சுட்டெரிக்கும் சூரியனுக்கு அருகே கழித்துவிட்டு ( 'glory days in the hot sun'), தற்போது பூமிக்குத் திரும்புகிறேன். ” என டுவிட்டரில் பதிவிட்டு விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட சூரியனின் படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications