கிடைக்குற கேப்புல எல்லாம் ஆப்பு.. RBI-ஐ தொடர்ந்து இந்திய வங்கிகள் வச்ச செக்.. தொங்கலில் Apple Pay UPI சேவை!
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களுக்கு போட்டியாக வரும் ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் பேமெண்ட் சேவை (Apple Mobile Payment Service) ஆன ஆப்பிள் பே (Apple Pay) அறிமுகம் குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
கமிஷன் ஆல் இழுபறி: ஆப்பிள் நிறுவனத்திற்கும், ஆப்பிள் பே சேவைக்கு உதவும் முக்கிய வங்கிகளுக்கும் இடையிலான பரிவர்த்தனை கமிஷன் குறித்த பேச்சுவார்த்தைகள் இழுபறியாகி வருவதால், ஆப்பிள் பே சேவையின் அறிமுகம் ஒரு தடையை சந்தித்துள்ளதாக மணி கண்ட்ரோல் (Moneycontrol) செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டாளர் வங்கிகளிடமிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு 20 அடிப்படை புள்ளிகளை (basis points - bps) ஆப்பிள் கோருவதாகவும், ஆனால் வங்கிகள், அமெரிக்கா உட்பட உலகளவில் ஆப்பிள் பின்பற்றும் கமிஷன் கட்டமைப்புக்கு இணங்க, 15 அடிப்படை புள்ளிகளை மட்டுமே வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த நாளே: ஆப்பிள் பே சேவையின் அறிமுகத்திற்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு (Technology infrastructure) பெரும்பாலும் தயாராக இருக்கும் போதிலும் கூட கமிஷனால் ஏற்பட்டு உள்ள இந்த தாமதம், ஆப்பிள் பே சேவையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபோன் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
ஆப்பிள் பே சேவையின் இந்திய அறிமுக கூட்டாளர்களில் ஒருவரின் கூற்றுப்படி, இந்த சேவை தொழில்நுட்ப ரீதியாக "அடுத்த நாளே" செயல்பாட்டிற்கு வரக்கூடும், ஆனால் கிரெடிட் கார்டுகளை வழங்கும் பெரிய வங்கிகள் உடனான பேச்சுவார்த்தைகள், வர்த்தக விதிமுறைகள் (commercial terms) தொடர்பாக இது முடங்கி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், தற்போது எச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ கார்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா (HDFC Bank, SBI Cards, ICICI Bank, Axis Bank and Kotak Mahindra Bank) வங்கி உள்ளிட்ட இந்தியாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதுஎன்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிரீமியம் சேவை: இந்தியாவில் கிட்டத்தட்ட 90% சந்தை பங்கை கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஆப்பிள் பே-ஐ ஒரு "பிரீமியம் சேவையாக" நிலைநிறுத்துவதன் மூலம், அதிக கமிஷன் கோருவதற்கான தனது கோரிக்கையை ஆப்பிள் நிறுவனம் நியாயப்படுத்தியுள்ளது. இருப்பினும், பெரிய வங்கிகளுடனான பேச்சுவார்த்தைகள் கடினமாகவே இருந்து வருகின்றன.
முதலில் ஆர்பிஐ.. இப்போது வங்கிகள்: முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தரவு உள்ளூர்மயமாக்கல் தேவைகள் மற்றும் கட்டாய வருடாந்திர அமைப்பு தணிக்கை அறிக்கைகளின் (SAR) அவசியம் ஆகியவைகள், ஆப்பிள் பே சேவையின் இந்திய நுழைவுக்கு ஒரு முக்கிய தடையாக இருந்தன. ஆப்பிள், தாங்கள் நேரடியாக பணம் செலுத்தும் தரவை சேமிக்காததால், எஸ்ஏஆர் தேவையின் கீழ் வராது என்று ஆரம்பத்தில் வாதிட்டது.
பின்னர் ஆர்பிஐ விதிமுறைகளுக்கு இணங்க, ஆப்பிள் டோக்கனைஸ் செய்யப்பட்ட பணம் செலுத்தும் தரவை வெளிநாடுகளில் பிரதிபலிப்பதற்கு பதிலாக, டிவைஸிலும், கார்டு நெட்வொர்க்குகளிலும் சேமித்து வைக்கும் என்று கூறப்படுகிறது. விசா, மாஸ்டர்கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற கார்டு நெட்வொர்க்குகள் ஏற்கனவே இந்தியாவின் தரவு உள்ளூர்மயமாக்கல் கட்டளைக்கு இணங்கியுள்ளன.
இந்தியாவில் ஆப்பிள் பே-க்காக கார்டு டோக்கனைசேஷனை செயல்படுத்த, கார்டு நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஆப்பிள் பணியாற்றி வருவதாகவும் விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உலகளவில், ஆப்பிள் டோக்கனைஸ் செய்யப்பட்ட பணம் செலுத்தும் தரவை அமெரிக்கா, டென்மார்க் மற்றும் சீனாவில் அமைந்துள்ள சர்வர்களில் பேக்கப் எடுக்கிறது. இருப்பினும், உள்ளூர் விதிமுறைகளுக்கு இணங்க, இந்திய பணம் செலுத்தும் தரவை சர்வதேச அளவில் பிரதிபலிப்பதை அந்நிறுவனம் தவிர்க்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications