இஸ்ரோவின் சந்திரயான் 2 திட்டத்தை உலக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது, குறிப்பாக இந்தியர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இஸ்ரோவின் சந்திரயான் திட்டத்திற்காக நிலவின் மண் மாதிரியைத் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர் குழு உருவாக்கியது. இவர்கள் உருவாக்கிய நிலவின் மண் மாதிரிக்கு தற்பொழுது மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.
சந்திரயான் 2 விண்கலத்துடன் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ரோவர் வாகனத்தைச் சோதனை செய்யத் தேவைப்பட்ட நிலவு மண், சேலம் அருகே உள்ள ஒரு கிராமப் பகுதியில் அதிகளவில் கிடைப்பதாக இஸ்ரோ கடந்த மார்ச் 2019 ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள சித்தாம்பூண்டி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் நிலவு மண் இருப்பது ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தப்பட்டது.
பல ஆண்டுகளாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவாக, நிலவில் உள்ள அதே கனிம வளம் கொண்ட நிலவு மண் தற்பொழுது பூமியில் அதுவும் தமிழ்நாட்டிலேயே கிடைக்கக்கூடியது என்று சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர் குழு கண்டறிந்தது. மிக அரிதான இந்த மண் அமெரிக்காவிலிருந்து கிலோ 150 டாலருக்கு விற்பனைக்குக் கிடைக்கப்பெறுகிறது.
ரோவர் சோதனை ஓட்டத்திற்காக இஸ்ரோவிற்கு சுமார் 60 முதல் 70 டன் நிலவு மண் தேவைப்பட்டது. விலை உயர்ந்த இந்த மண், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தால், நிச்சயமாகப் பெரிய அளவில் நிதி செலவிட வேண்டும் என்பதால், மும்பை ஐஐடி உடன் இனைந்து பேராசிரியர் அன்பழகன் துவங்கிய இந்த ஆராய்ச்சி வெற்றியைக் கொடுத்தது. இந்த நிலவு மணலை பயன்படுத்தி சந்திரயான் ரோவர் சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பசால்ட் என்ற எரிமலை பறை மற்றும் அனார்த்தசைட் என்ற பாறை வகைகள் தான் நிலவின் மேற்பரப்பில் பெரிதும் காணப்படுகின்றன. அனார்த்தசைட் என்று அழைக்கப்படும் இந்த அறிய வகை பாறைகள், சித்தாம் பூண்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 400 முதல் 500 அடி வரை பூமியில் துளையிட்டு இந்த அறிய வகை நிலவு மண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் நிலவு மண் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நமது நாட்டிலேயே நிலவு மண் கிடைத்துள்ளது பெருமைக்குரியதே. இந்த நிலவு மண் கண்டுபிடித்ததற்காகச் சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியர் அன்பழகன் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் காப்புரிமை கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்து.
இஸ்ரோ ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்த இந்த நிலவு மண்ணின்ஆராய்ச்சியை மதிப்பளிக்கும் விதத்தில்,ஆராய்ச்சி குழுவினர் அளித்த விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் அறிவுசார் காப்புரிமை கழகம் தற்பொழுது நிலவு மண்ணிற்கு காப்பு உரிமை வழங்கியுள்ளது. தமிழர்களுக்கு கிடைத்துள்ள புதிய பெருமிதம் இது என்பதில் சந்தேகமில்லை.