இந்த ஊரடங்கு காலத்தில் பலருக்கும் பல விதமான சிக்கலைச் சந்தித்து இருப்பார்கள், அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களின் பாடு இன்னும் மோசமாகத் தான் இருக்கும். ஓடியாடி விளையாடித் திரிந்த குழந்தைகளை வீட்டிற்குள் அடைப்பது மட்டுமின்றி, அவர்களின் மனநிலை பாதிக்கப்படாமல், அவர்களின் நேரத்தைப் பயனுள்ளதாய் மாற்ற விரும்பும் வாசகர்களுக்கு இந்த பதிவு உண்மையில் பயனுள்ளதாய் இருக்கும்.
முதலில் ஊரடங்கின் போது குழந்தைகளின் மனநிலை எவ்வளவு பாதித்துள்ளது என்று தெரிந்துகொண்டால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான தேவையைப் புரிந்துகொள்வது சுலபமாக இருக்கும். சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின் முடிவு படி, ஊரடங்கின் போது குழந்தைகளின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குழந்தைகளின் மனதில் பீதியும், பயமும் அதிகரித்துள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.
உதாரணத்திற்கு, பெங்களூரைச் சேர்ந்த குழந்தை கடந்த 40 நாட்களாகத் தன்னை தன் பெற்றோர் தண்டித்ததாக நினைத்துள்ளது. அதேபோல், 3 வயதுக் குழந்தை தனது பெற்றோரிடம் வைரஸால் நாம் இறந்துவிடுவோமா என்று பயத்துடன் கேட்டுள்ளது. இன்னும் சில குழந்தைகளின் கனவில் கூட கொரோனா வைரஸ் துரத்துவது போன்று பீதியான மனநிலை உருவாகியுள்ளது. இதற்கான தீர்வு குழந்தைகளின் கவனத்தைத் திசைதிருப்புவதாக மட்டுமே இருக்க முடியும்.
வீட்டிற்குள் குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்பி, அதை பயனுள்ளதாய் மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரு தீர்வு ஓவியம். ஓவியங்களை வரையும் பொழுது குழந்தைகளின் கவனம் வேறு பக்கம் திரும்புகிறது. அதேபோல், வண்ணங்களுடன் விளையாடும் பொழுது மன அழுத்தம் குறைகிறது. குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பதற்காகவே சில எளிமையான எப்படி வரைவது டிஜிட்டல் புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கிறது.
குறிப்பாக அமேசான் கிண்டில் (Amazon Kindle) தளத்தில், விஜய் அமர்நாத் என்ற சென்னை ஓவியரின் புத்தகங்களை உலகத்தில் உள்ள பலரும் Kindle பயன்பாட்டின் மூலம் பதிவிறக்கம் செய்து தங்கள் குழந்தைகளுக்கு எளிதாக விலங்குகள், பறவைகள், எழுத்துக்கள், உணவு வகைகள் போன்று பல படங்களை வரைவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் தன்னுடைய நேரத்தைப் பயனுள்ளதாய் மாற்றிய மழலை மனம் கொண்ட எழுத்தாளர் இவர்.
விஜய் அமர்நாத், இந்த ஊரடங்கு காலத்தில், அதாவது சரியாகச் சொன்னால் ஒரு மாதத்தில் 50 வரைவது எப்படி புத்தகங்களை Amazon Kindle தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதுவும் இவருடைய புத்தகங்கள் அனைத்தும் அமேசானின் டாப் 100 புத்தகங்களின் பட்டியலில் 46வது இடத்தை பிடித்துள்ளது. இவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கான வரைவது எப்படி புத்தகங்களாகும். இந்த முயற்சிக்கான காரணம் என்ன என்பதை அறிய அவரை தொடர்பு கொண்டோம்.
விஜய் அமர்நாத், சென்னை ஓவிய கல்லூரியில் பைன் ஆர்ட்ஸ் முடித்திருக்கிறார். திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது, விளம்பர படங்கள் எடுப்பது போன்று பல கலைத்துறைகளில் செயல்பட்டுவருகிறார். ஊரடங்கு காலத்தில் தனது நேரத்தை அவருக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாய் மாற்ற Amazon Kindle தளத்தில் தனது புத்தகங்களைக் குழந்தைகளுக்காக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி முதல்கட்ட இலக்காக 50 புத்தகங்களை உருவாக்கியுள்ளார்.
குழந்தைகளுடன் அவர்களுக்கு வரைவது எப்படி கற்றுக் கொடுக்கும் பெற்றோர்களும் இதை முயற்சி செய்வதால் அவர்களின் மன அழுத்தமும் குறைகிறது என்று தெரிவித்திருக்கிறார். இவரின் சில புத்தகங்களில் இட்லி, தோசை போன்ற தமிழ்நாட்டின் உணவு வகை படங்களையும் அதன் பெயருடன் புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.
இதனால் உலகம் முழுதும் உள்ள வாசர்களின் குழந்தைகளுக்கும் இட்லி எப்படி இருக்கும், தோசை எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.அதேபோல், மெக்ஸிகன் மற்றும் சைனீஸ் உணவு வகை வரைபட புத்தகங்களும் இவரிடம் உள்ளது. இவருடைய புத்தங்களின் மூலம் குழந்தைகள் வரைவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதுடன், அவற்றின் பெயர்களையும் மனதில் பதியச் செய்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் வீணாய் பொழுதைக் கழிக்காமல் டிஜிட்டல் பெயின்டிங் முறையைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான புத்தகங்களை உருவாக்கிய இவரின் இலக்கு 100 புத்தகங்களாம். இவர் புத்தகத்தை பார்த்து காண்டாமிருகம் வரைவது எப்படி என்பதை வெறும் 2 நிமிடத்தில் ட்ரை செய்ஞ்சுட்டேன். நீங்களும் ட்ரை செஞ்சு பாருங்க.
Amazon Kindle தளத்தில் யார் வேண்டுமானாலும் அவர்களின் படைப்பை அப்லோட் செய்யலாம் என்பதால் மற்றவர்களும் இதை ட்ரை செய்யலாம் என்கிறார் விஜய் அமர்நாத். உலகளவில் உங்கள் புத்தகம் சென்றடைய இதில் வாய்ப்பு அதிகமுள்ளது, அதேபோல் இதில் லாபமும் உள்ளது என்று கூறி தனது அடுத்த புத்தகத்தை உருவாக்க டிஜிட்டல் பேனாவுடன் பிஸியாகிவிட்டார். ஊரடங்கு நேரத்தில் குழந்தைகளுக்காக இவர் செய்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.