இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. புதிய விதிமுறைகளின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. சாலை விபத்துகளால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமீறல்களை கடுமையாக கண்காணிக்கும் வகையில் சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு இ-செல்லான் மூலம் அபராதம் அனுப்பப்படும். பின் அவர்கள் விதிமீறலுக்கான அபராத தொகையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக செலுத்த முடியும்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத விவரங்களை ஆன்லைனில் கண்டறிந்து பணம் செலுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
வழிமுறை 1: முதலில் மொபைல் அல்லது லேப்டாப் மூலம் இ செல்லான் வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வலைப்பக்கத்தில் செக் செல்லான் ஸ்டேட்டஸ் எனும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும்.
செல்லான் விவரங்களை தேட லைசன்ஸ் நம்பர், செல்லான் நம்பர் அல்லது வாகன பதிவு எண் கொண்டு கண்டறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட விவரங்களுடன் கேப்ச்சாவை பதிவிட வேண்டும்.
மேலே கேட்கப்பட்ட விவரங்களை பதிவிட்டதும், செல்லான் விவரங்கள் திரையில் தோன்றும். சில சமயங்களில் வாகன பதிவு எண் மற்றும் லைசன்ஸ் நம்பர் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செல்லான்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதனால் செல்லான் விவரங்களை அறிந்து கொள்ள இரண்டு வழிமுறைகளிலும் தேடுவது நல்லது.
செல்லான் விவரங்களை அறிந்து கொண்டதும், பே நௌ என்ற பட்டனை க்ளிக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த துவங்கலாம்.
பணம் செலுத்த மொபைல் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் முறையை பின்பற்ற வேண்டும். பின் இ செல்லான் பணம் செலுத்துவதற்கான வலைத்தளத்திற்கு செல்லலாம்.
இனி பணம் செலுத்துவதை உறுதிப்படுத்தும் வலைப்பக்கம் திறக்கும். இங்கு புரொசீட் வித் நெட் பேமெண்ட் எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் நெட் பேங்கிங், கார்டு பேமெண்ட் உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பு: செல்லான் வலைத்தளத்தில் எங்களது தேடலுக்கு செல்லான் விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை என கிடைத்தது. வேறு வழிமுறைகளை பின்பற்ற மூன்றாம் தரப்பு சேவைகளும் கிடைக்கின்றன. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.