வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் வாட்ஸ் அப் நிறுவனத்தால் புகாரளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டில் புதிய மால்வேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனரின் அனைத்து தகவல்களையும் திருட முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) வாட்ஸ்அப் இல் உள்ள பாதிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளது. தற்பொழுது வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், எம்பி 4 ஃபைல் வடிவத்தில் பயனரின் போனுக்கு அனுப்பப்பட்டுத் தாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனரின் மொபைல் போனிற்கு வரும் வீடியோ ஃபைல்லை ஓபன் செய்ததும், ஹேக்கரின் கட்டுப்பாட்டிற்குள் பயனரின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் மற்றும் அதில் உள்ள சாட், புகைப்படம் மற்றும் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஹேக்கர்களால் திருட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர் வகை, ‘உயர் தீவிரம்' அச்சுறுத்தல் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் சி.இ.ஆர்.டி அறிவித்துள்ள தகவலின்படி, இந்த புதிய வாட்ஸ்அப் மால்வேர் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளத்தின் பயனர்களைத் தாக்கக்கூடியது என்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மால்வேர், வாட்ஸ்அப் V2.19.134 வெர்ஷன்க்கு முன்னர் வந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களையும், v2.19.44-க்கு முன்னர் வந்த வாட்ஸ்அப் பிசினஸ் வெர்ஷனிற்கும், v2.19.51-க்கு முன்னர் வந்த iOS வாட்ஸ்அப் மற்றும் v2.19.51-க்கு முன்னர் வந்த iOS வாட்ஸ்அப் பிசினஸ் வெர்ஷனிற்கும், விண்டோஸ் போனுக்கான வாட்ஸ்அப் v2.18.348 வெர்ஷன் மற்றும் v2.18.15 டைசன்(Tizen) வெர்ஷனை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் வீடியோ டவுன்லோட் ஆப்ஷனில் ஆட்டோமேட்டிக் டவுன்லோட் சேவையை ஆனில் வைத்திருப்பார்கள், அதை உடனே ஆஃப் செய்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. தெரியாத எண்ணில் இருந்தோ அல்லது சந்தேகத்திற்குரிய வீடியோகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பாதுகாப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதென்றும், அதற்கான பல வேலைகளை வாட்ஸ்அப் தொடர்ந்து செய்து வருவதாகவும் அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயனர்கள் பாதுகாப்பாக இருக்க உடனடியாக சமீபத்திய வெர்ஷனை டவுன்லோட் செய்துகொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.