தமிழகக் காவல்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு அண்மையில் பொதுமக்களுக்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பாதுகாப்பு பயன்பாட்டுச் செயலி தான் 'காவலன்' Kavalan SOS app. பொதுமக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது காவல்துறையைத் தொடர்புகொள்ள 100 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டாம். இந்தச் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு செயலியாக இந்த காவலன் SOS செயலி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், உடனே காவல் துறையைச் சம்பவ இடத்திற்கு அழைக்க இந்த செயலி போதுமானது என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவசர நேரம் மற்றும் ஆபத்தான நேரத்தில் உங்கள் பாதுகாப்பிற்கு காவல்துறையின் உதவி தேவைப்பட்டால் உடனே இந்த செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினாள் போதும். நீங்கள் பட்டனை அழுத்திய அடுத்த நொடியில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும். நீங்கள் இருக்கும் இடத்தின் ஜி.பி.எஸ் லொகேஷனும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றுவிடும். சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வரும்.
பொதுமக்கள் 'KAVALAN SOS APP' செயலியைப் பயன்படுத்துமாறு காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த செயலியில் உங்களின் லைவ் லொகேஷன், ஜி.பி.எஸ். லைவ் ட்ராக்கிங், அழைப்பவரின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடம் கட்டுப்பாடு அறைக்கு அனுப்பப்படும், செயலியில் பதிவு செய்துள்ள உங்கள் குடும்பத்தினரின் எண்களுக்குத் தானாகவே மெசேஜ் அனுப்பப்படும் சேவை போன்று பல சேவைகள் உள்ளது.
இந்த செயலி தற்பொழுது கூகுள்பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. இதை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைல் எண், மாற்று பயன்பாட்டு எண், ஈமெயில் ஐடி, குடும்பத்தினர் விலாசம் போன்ற தகவல்களைப் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஆபத்தான நேரத்தில் மிக எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் ஷேக் ட்ரிக்கர் வசதியும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனாளர்கள் தங்கள் விபரங்களை ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பிறகு செயலியை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது மூன்று நபர்களுக்குத் தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பெரிதும் பயன்படும் இந்த செயலியை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.